பாட்னா: பீஹாரில் ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி பல்வேறு பகுதிகளில் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நபர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் கீழ் ரகசிய ஏஜென்டாக பணியாற்றுவதாகவும் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் நடத்திய சோதனையில் அவர் பயன்படுத்தியதாக கூறப்படும் பல்வேறு போலி அடையாள அட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பீஹாரின் கஹாரியா மாவட்டம் ஜமால்பூரைச் சேர்ந்த மனீஷ் குப்தா என்பவர், தன்னை ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக உளவுத்துறையிடம் இருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது.
இதையடுத்து மனீஷ் குப்தாவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர் அதிகாரிகளிடம் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அடையாள அட்டையை காண்பித்ததாக கூறப்படுகிறது. மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் கீழ் ரகசிய ஏஜென்டாக பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்ததாக போலீசார் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: 'போலீஸ் சீருடையில் வந்தவர்கள் பணம் பறித்தனர்'! பாஜ மாநில செயலாளர் ராம. சீனிவாசன் பரபரப்பு புகார்!
இதுமட்டுமின்றி, ஐஏஎஸ் அதிகாரிக்கான அடையாள அட்டையையும் அவர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட இந்த அடையாள அட்டைகள் அனைத்தும் போலியானவை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 31 லிட்டருக்கும் அதிகமான வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், ‘மத்திய அரசு’ என்ற பெயர் குறிப்பிடப்பட்ட பலகையுடன் கூடிய டெஸ்லா சொகுசு கார், டாடா சஃபாரி கார் ஆகியவையும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுதவிர, ஐந்து ஐபோன்கள், 20 கிரெடிட் கார்டுகள், எட்டு டெபிட் கார்டுகள் மற்றும் நான்கு காசோலை புத்தகங்களும் சோதனையில் சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வீட்டில் சட்டவிரோதமாக வைத்திருந்ததாக கூறப்படும் இரண்டு மான் கொம்புகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதையடுத்து மனீஷ் குப்தாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் இதுவரை யாரிடமெல்லாம் தன்னை ஐஏஎஸ் அதிகாரி அல்லது மத்திய அரசின் ரகசிய ஏஜென்ட் என அறிமுகப்படுத்தியுள்ளார், அதன் மூலம் பணம் அல்லது வேறு ஏதேனும் பலன்களை பெற்றுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், அவரது சொத்து மதிப்பு மற்றும் பணப்பரிவர்த்தனைகள் குறித்து பீஹார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் உதவியுடன் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். போலி அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்ட விதம், அவற்றை பயன்படுத்தி அவர் மேற்கொண்டதாக கூறப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் உயிரிழப்பு! குடும்பத்தை உலுக்கிய சோகம்! போலீசார் விசாரணை!