அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, டொனால்ட் டிரம்புக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் தீவிர பிரசாரம் செய்தார். டிரம்பின் குடியரசு கட்சிக்கு தேர்தல் நிதியாக பணத்தை அள்ளிக்கொடுத்தார். இதனால், டிரம்ப்– மஸ்க் இடையேயான நட்பு ஆழமானது. டிரம்ப் அதிபராக ஆனதும், தாம் ஏற்கனவே சொன்னபடி, தமது அரசில் எலான் மக்ஸ்க்கு முக்கிய இடம் தந்தார்.
அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் 2-வது முறையாக பதவியேற்றதும் அரசு செலவினங்களை குறைப்பதற்காக, தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் அரசு செயல்திறன் துறை (டிஓஜிஇ) என்று உருவாக்கப்பட்டது.

ஆண்டுதோறும் எலான் மஸ்க் 130 நாட்கள் சிறப்பு அரசு ஊழியராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது. அரசின் தேவையற்ற செலவுகளை குறைப்பது இந்த துறையின் முக்கிய நோக்கம். அதற்கான பணிகளில் அதிரடியாக இயங்கினார் மஸ்க். அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது உட்பட பல ஆலோசனைகளை அமெரிக்க அரசுக்கு வழங்கி வந்தார். இதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பும் கிளம்பியது.
இதையும் படிங்க: அமெரிக்காவிற்குள் நுழைய 12 நாட்டு மக்களுக்கு தடை: அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப்..!
இந்நிலையில், அமெரிக்க அரசின் பட்ஜெட் தயார் செய்யப்பட்டது. இது எலான் மஸ்க் தலைமையிலான அரசு செயல்திறன் துறை தெரிவித்த பரிந்துரைகளுக்கு மாறாக இருந்துள்ளது.

மக்களுக்கு ஏராளமான வரிச்சலுகைகளுடன், ராணுவ பட்ஜெட் செலவினங்களும் அதிகமாக இருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் பல வரிச்சலுகைகளை அளித்தது. அதேபோல் தற்போதும் 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 1,300 டாலர் கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பயனடைவர். பட்ஜெட் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. அதிபர் ட்ரம்பின் மிகப் பெரிய மற்றும் அருமையான பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக தொழிலதிபர் எலான் மஸ்க் கூறினார்.
சிறப்பு அரசு ஊழியராக எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிவுக்கு வருகிறது. வீண் செலவினங்களை குறைக்க வாய்ப்பளித்த அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு நன்றி. அமெரிக்க அரசின் மிகப் பெரிய பட்ஜெட், நிதி பற்றாக்குறையை அதிகரித்துள்ளது.

அரசு செயல்திறன் துறையின் பணிகளை குறைத்து மதிப்பிட்டுள்ளது. இந்த பட்ஜெட் பெரியதாக இருக்கலாம் அல்லது அருமையானதாக இருக்கலாம். ஆனால் இரண்டும் சேர்ந்ததாக இருக்குமா என தெரியவில்லை என எலான் மஸ்க் அப்போது தெரிவித்தார். இருவருக்குள் மனக்கசப்பு ஏற்பட்டதால் பதவியில் இருந்து விலகினார் எலான் மஸ்க்.
அதிபர் டிரம்ப் கூறும்போது, அமெரிக்காவின் வரி மற்றும் சலுகை மசோதாவின் அசம்சங்கள் பற்றி இங்கு இருப்பவர்களை விட மஸ்க்குக்கு நன்றாக தெரியும். இருப்பினும் எதிர்க்கிறார்.
மஸ்க் எனக்கு எதிராக இருப்பது பற்றி கவலையில்லை. நாங்கள் சிறந்த நட்புடன்தான் இருந்தோம். இனியும் அப்படி இருப்போமா என்பது தெரியவில்லை என டிரம்ப் கூறியிருந்தார்.
தமது பட்ஜெட்டில் பில்லியன் கணக்கான டாலர்களை சேமிப்பதற்கான எளிதான வழி, எலான் மஸ்க் நிறுவனத்துக்கு அரசு மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாகும் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் டிரம்ப் பதிவிட்டு இருந்தார். இது இருவரின் நட்பை மேலும் சிக்கல் ஆக்கியது.

அதிபர் டிரம்புக்கு பதிலளித்த எலான் மஸ்க், நான் மட்டும் இல்லையென்றால் அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்று இருப்பார். அவர் நன்றி இல்லாதவராக இருக்கிறார். அந்த மசோதா பொருளாதார மந்த நிலையை உருவாக்கும். எனது நிறுவனத்தின் ஒப்பந்த்தை அரசு நிறுத்தினால், டிராகன் விண்கலம் உடனடியாக தனது பணியை நிறுத்தும் என்று மஸ்க் கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த அதிபர் டிரம்ப், அவர் சொல்வது போல் இல்லை. நான் பென்சில்வேனியாவை வென்று அதிக வித்தியாசத்தில் வென்று இருப்பேன் எனக் கூறியுள்ளார். பொதுவெளியில் ஒருவர் மீது ஒருவர் விமர்சனங்களை முன்வைத்து வருவது, நண்பர்களாக இருந்த எலான் மஸ்க் அதிபர் டிரம்ப் இடையே மோதல் உக்கிரம் அடைந்துள்ளதை காட்டுகிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு அவங்க மொழியிலேயே பதிலடி கொடுத்தோம்! அமெரிக்காவில் சசிதரூர் கெத்து ரிப்ளை!