தமிழகத்தில் சமீபகாலமாகத் தங்களது குழந்தைகளை வெளியே அனுப்பினால், அவர்கள் மீண்டும் பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை பெற்றோர்கள் பெரும் அச்சத்துடன் இருக்க வேண்டிய அவல நிலை எழுந்துள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் மிகுந்த மனவேதனை தெரிவித்துள்ளார். திருவாரூரில் இன்று நடைபெற்ற தனியார் நிறுவனம் சார்பிலான ஏழை எளிய மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். மாணவ, மாணவியருக்குக் கல்வி உதவித்தொகைகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்துப் பல்வேறு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசினார்.
தமிழகத்தில் சமீப நாட்களாகக் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இதனை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டியது ஆட்சியாளர்களின் மிக முக்கியக் கடமை என்றும் ஜி.கே. வாசன் குறிப்பிட்டார். பெற்றோர்களிடம் நிலவி வரும் இந்த அச்சத்திற்கும் பயத்திற்கும் முக்கியக் காரணம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டமும், டாஸ்மாக் மதுபானக் கடைகளும்தான் என்று அவர் சாடினார். இவற்றின் விளைவாகவே கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடூரக் குற்றங்கள் தினந்தோறும் அரங்கேறி வருகின்றன என்றும், தலைநகர் சென்னையில் மட்டுமே கடந்த 24 மணி நேரத்தில் 12 குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகப் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

மூன்று வயது பச்சிளங்குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்குக் காரணம் தனிமனித ஒழுக்கம் கெட்டுப் போனதே ஆகும் என்றும், இந்த ஒழுக்கக் கேட்டிற்குக் குடிப் பழக்கமும், போதைப் பழக்கமுமே அடிப்படைக் காரணம் என்றும் அவர் விவரித்தார். துறை ரீதியான பணிகளை மேற்கொள்வதற்குப் புதிய ஆட்சியாளர்களுக்குக் கால அவகாசம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றங்களுக்கு நேரம் காலம் கிடையாது என்பதால், அரசு இதில் உடனடியாக ராணுவ ரீதியாக இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முதலிடம் கொடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், தவறு செய்பவர்களை நேரடியாகப் பார்த்தால் சுட்டுத் தள்ளும் ஆணையை அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு ஆதரவாக யாரும் வாதாடக் கூடாது என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: பாஜக கூட்டணியில் இருந்து விலகியது த.மா.கா! ஜி.கே.வாசன் அறிவிப்பு!
விவசாயிகளின் நலன் குறித்துப் பேசிய ஜி.கே. வாசன், மண் வளம் மற்றும் கடல் வளம் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்காகப் பாதுகாக்க வேண்டிய நோக்கில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் தமிழகத்தில் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என்பதே தமாகாவின் உறுதியான நிலைப்பாடு என்றார். மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும், இந்த அணை கட்டப்பட்டால் டெல்டா மண்டலம் பாலைவனமாக மாறிவிடும் என்பதால் இது இரு மாநில உறவுப் பிரச்சினை மட்டுமல்ல, ஒட்டுமொத்த விவசாயிகளின் உயிர் பிரச்சினை என்றும் குறிப்பிட்டார். ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து விவசாயத்திற்குத் தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா விவசாயிகள் பெரும் நஷ்டத்திலும் கஷ்டத்திலும் தவித்து வருவதாகவும், எனவே விவசாயிகளின் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்து, அவர்களின் குறைகளை 100 சதவீதம் தீர்க்கத் தமிழக அரசு பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: பவானிபூர் தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் மமதா பானர்ஜி வழக்கு: கொல்கத்தாவில் பரபரப்பு!