தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மையில் திமுக மற்றும் அதிமுக-வை விமர்சித்துப் பேசியதற்குப் பதிலடியாக, அதிமுக ஐடி விங் தனது அதிகாரப்பூர்வப் பக்கத்தில் ஒரு அனல் பறக்கும் பதிவை வெளியிட்டுள்ளது. அதில் விஜய்யை "பனையூர் பண்ணையார்" மற்றும் "அங்கிள்" (Uncle) என விளித்து எள்ளி நகையாடியுள்ளனர்.
அப்பாவால் சினிமாவுக்குள் வந்த நீங்கள், அங்கு ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோரைப் பார்த்து 'காப்பி பேஸ்ட்'
செய்தீர்கள். இப்போது அரசியலிலும் மற்றக் கட்சித் தலைவர்களின் வரலாற்றைத் திருடி ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறீர்கள். அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்கள் எப்படி ஒரிஜினல் ஆவீங்க?
திமுக எதிலெல்லாம் 'அவுட் ஆஃப் கண்ட்ரோல்' என்று எமது பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஏற்கெனவே பதிவிட்டிருந்தார். அதை அப்படியே காப்பி அடித்து, யாரோ எழுதிக் கொடுத்ததை 'ஆக்ஷன்' என்று சொன்னதும் ஒப்பிக்கிறீர்கள். சொந்தமாக ஒரு வரியைக் கூடப் பேசத் தெரியாத நீங்கள், வரலாற்றைப் பற்றிப் பேசலாமா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “பனையூர் பண்ணையாரே.. ஆகப்பெரும் ஊழல்வாதி நீங்கள்தான்!” விஜய்க்கு அதிமுக கடும் பதிலடி!
கோவில் வாசலில் சிதறும் தேங்காய் சில்லுகளைப் பொறுக்குவது போல, மற்றக் கட்சிகளிலிருந்து தூக்கி எறியப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு ஒரு 'வாட்சப் குழு'வை நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள், மற்றக் கட்சிகளைக் கலைத்துவிட்டு வாருங்கள் எனச் சவால் விடுவது சிரிப்பாக உள்ளது. அரசியல் புரிதலோ, வரலாறோ இல்லாததால் எங்கள் தலைவர்களான பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரை இரவல் வாங்கி சவாரி செய்கிறீர்கள்.
அதிமுக இன்றும் அண்ணா நாமம் வாழ்க என முழங்கும் இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புகளின் இயக்கம். அம்மாவின் ஆட்சி அமைய அணிலாய் இருந்ததாகச் சொன்னீர்களே... கரூரில் 41 பேர் மரித்த போது 'பேசக்கூடாது' என்ற அம்மாவின் அரசியல் பண்போடுதான் எடப்பாடியார் நாகரிகமாக நடந்துகொண்டார். ஆனால் நீங்கள் தப்பி ஓடினீர்கள்.
"சினிமா எஃப்.டி.எஃப்.எஸ் (FDFS) டிக்கெட்டுகளை 2000 ரூபாய்க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லையா? அப்படிப் பார்த்தால் உங்களுக்கு 30 வருஷ கொள்ளை அனுபவம் இருக்கிறது. எனவே, கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க அங்கிள்!" என அந்தப் பதிவில் கிண்டலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய்யின் அரசியல் விமர்சனங்களுக்கு அதிமுக தரப்பிலிருந்து இதுவரை வந்ததிலேயே இதுதான் மிகக் காரசாரமான மற்றும் தனிநபர் விமர்சனங்கள் கொண்டப் பதிவாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கூட்டணி குறித்து தலைவர் தான் முடிவெடுப்பார்! சேலத்தில் புஸ்ஸி ஆனந்த் பேட்டி!