காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி விபத்து. இரு சக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி இருவரும் உயிரிழப்பு. காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பட்டு நெசல் கிராமம் பகுதியில் சேர்ந்தவர்கள் அண்ணாமலை (வயது 32) சோனியா (வயது 26) தம்பதியினர். இவர்களுக்கு திவ்யா ஸ்ரீ (8), சாய் வசந்த் வயது (5 )என இரு குழந்தைகள் உள்ளனர்.
அண்ணாமலை டிரைவராக பணிபுரிந்து கொண்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குழந்தைகள் இருவரையும் உறவினர் வீட்டில் விட்டு அண்ணாமலையும் அவரது மனைவி சோனியாவும் சொந்த ஊரான நெசல் கிராமத்திற்கு தங்களின் இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் ஓரிக்கை வழியாக சென்று கொண்டிருந்து உள்ளனர்.
இதையும் படிங்க: இமாசல பிரதேசத்தில் சோகம்: பள்ளத்தில் பாய்ந்த கார்..!! 7 பேர் பரிதாப பலி..!!
அப்போது செவிலிமேடு பகுதியில் இருந்து ஓரிக்கை நோக்கி வேகமாக வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து எதிர்பாராத விதமாக அண்ணாமலை ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவியான அண்ணாமலையும் சோனியாவும் பலத்த காயம் அடைந்த நிலையில் சோனியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து போனார்.
படுகாயம் அடைந்த அண்ணாமலையை அவ் வழியாக சென்றவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அண்ணாமலையும் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் உயிரிழந்த இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: உச்சக்கட்ட கொடூரம்... அதிவேகமாக மோதிய லாரி... காரை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்த 3 இளைஞர்கள் உடல்...!