தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் ஏற்பட்டுள்ள அரசியல் இழுபறிக்கு மத்தியில், இந்திய ஜனநாயகக் கட்சியின் (ஐஜேகே) நிறுவனர் டாக்டர் எஸ். பாரிவேந்தர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஆதரவாகத் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசு அமைவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்து பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். மக்களின் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு. இந்தத் தேர்தலில் அதிக இடங்களை வென்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைப்பது ஆளுநரின் ஜனநாயகக் கடமையாகும். ஜனநாயக மரபுகளின்படி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள ஒரு கட்சிக்கு ஆட்சி அமைக்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக ஆளுநர் மேலும் காலம் தாழ்த்தாமல், மாநிலத்தின் நலன் கருதிப் புதிய அரசு அமைவதற்கான உரிய முடிவை உடனடியாக எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் இபிஎஸ் ஆலோசனை.. தவெக ஆட்சி அமைப்பதை தடுக்க வியூகம்!
ஏற்கனவே காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் விஜய்க்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்துள்ள நிலையில், தற்போது ஐஜேகே பாரிவேந்தரும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
திமுக தனது எம்.எல்.ஏ-க்களை மே 10 வரை சென்னையில் இருக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ள சூழலில், ஆளுநரின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதே ஒட்டுமொத்தத் தமிழகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: விஜய் போனில் அழைத்து ஆதரவு கேட்டார் - விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பு பேட்டி!