தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைத் தொலைபேசியில் அழைத்து ஆதரவு கோரியுள்ளார். இது தொடர்பாகத் திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.
ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைத் திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ள விஜய், விசிக-வின் ஆதரவை நாடியுள்ளார்: தற்போது நிலவும் பரபரப்பான சூழலால் நேரில் வர முடியவில்லை, அதனால் தொலைபேசியில் அழைக்கிறேன் என்று விஜய் தன்னிடம் கூறியதாகத் திருமாவளவன் தெரிவித்தார்.
தவெக ஆட்சி அமைக்க விசிக-வின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தர வேண்டும் என்று விஜய் விடுத்த கோரிக்கையை அவர் உறுதிப்படுத்தினார். தவெக-விற்கு ஆதரவு அளிப்பது குறித்துத் திருமாவளவன் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: காங்கிரசுக்கு பாஜக கடும் கண்டனம்.. தவெக-விற்கு ஆதரவு தெரிவித்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு!
சிபிஐ (CPI) மற்றும் சிபிஎம் (CPM) ஆகிய இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து இது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இடதுசாரிகள் மற்றும் விசிக ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து எங்களது இறுதி முடிவை நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்" என்று அவர் கூறினார்.

தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய குழப்பங்கள் குறித்து அவர் கூறியதாவது, 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என்று ஆளுநர் கூறுவது, விஜய்க்குத் திட்டமிட்டு அளிக்கப்படும் நெருக்கடியாகவே நாங்கள் பார்க்கிறோம்.
திமுக மற்றும் அதிமுக இடையே கூட்டணி உருவாக வாய்ப்பிருப்பதாக எழும் யூகங்களுக்குப் பதிலளிக்க விரும்பவில்லை என்றும், அத்தகைய செய்திகள் இன்னும் ஒரு வடிவம் பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் விஜய்க்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்துள்ள நிலையில், நாளை விசிக மற்றும் இடதுசாரிகள் எடுக்கும் முடிவு தமிழகத்தில் புதிய அரசு அமைவதில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு எடப்பாடி பழனிசாமி.. அடுத்த 3 நாட்கள் சென்னையில் தங்கியிருக்க அறிவுறுத்தல்!