நாட்டின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு 5 அடுக்குத் தீவிரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) மற்றும் தமிழகக் காவல் துறை சார்பில் 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலைய வளாகத்திற்குள் நுழையும் கார், டாக்ஸி, வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தடைய தடயவியல் வல்லுநர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: "காவி கொடி வேண்டாம், தேசியக் கொடி தாருங்கள்" - பாஜக நிர்வாகிகளைக் கடிந்துகொண்ட அமித் ஷா!
பயணிகளை ஏற்றிக் கொள்ளவும், இறக்கிவிடவும் வரும் வாகனங்கள் வெகுநேரம் விமான நிலைய வளாகத்தில் நிற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் உடனடியாக வாகனங்களில் இருந்து இறங்கிச் செல்ல வேண்டும் எனவும், தேவைக்கு மேல் நிற்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிஐஎஸ்எஃப் (CISF) அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும், விமான நிலையத்தின் அனைத்துப் பகுதிகளும் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நிறைவடையும் வரை இந்த கூடுதல் பாதுகாப்பு மற்றும் தீவிர வாகன சோதனைகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாதுகாப்புச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றித் தங்களது பயணங்களை மேற்கொள்ள வழக்கமான நேரத்தை விடக் கூடுதல் நேரத்திற்கு முன்பாகவே சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேருமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.6.39 கோடியை திரும்பப் பெற வேண்டும்: பழமை மாறா வளர்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!