இந்தியாவின் விண்வெளித் துறையில் இன்று முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட தனியார் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் உருவாக்கிய விக்ரம்-1 ராக்கெட் இன்று (ஜூலை 18) காலை 11.30 மணிக்கு ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்தியாவில் ஒரு தனியார் நிறுவனம் முழுமையாக வடிவமைத்து, செயற்கைக்கோளை புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் திறனுடன் உருவாக்கிய முதல் ஆர்பிட்டல் ராக்கெட் என்பதால் இந்த ஏவுதல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஏற்கனவே 2022-ஆம் ஆண்டு விக்ரம்-எஸ் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பி இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் நிறுவனமாக சாதனை படைத்தது. அந்த வெற்றியைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டுள்ள விக்ரம்-1, சிறிய செயற்கைக்கோள்களை குறைந்த உயர புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்... நாளை விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்!

இந்த ராக்கெட் சுமார் 350 கிலோ எடை வரை சுமக்கும் திறன் கொண்டதாகும். அதிக உந்துவிசை வழங்கும் திட எரிபொருள் பூஸ்டர்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதல் சோதனைப் பயணத்தில் சுமார் 450 கிலோமீட்டர் உயரத்தில், 60 டிகிரி சாய்வு கொண்ட சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்துவதே திட்டத்தின் முக்கிய இலக்காகும். இந்த சோதனை வெற்றி பெற்றால், இந்தியாவின் தனியார் விண்வெளி துறைக்கு உலக சந்தையில் புதிய வாய்ப்புகள் உருவாகும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்து செய்தியில், இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் இது வரலாற்று மைல்கல் என்றும், விண்வெளித் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதற்கான எடுத்துக்காட்டாக இந்த ஏவுதல் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், விக்ரம்-1 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து, வருங்கால இளைஞர்களுக்கு உத்வேகமாக அமைய வேண்டும் என்றும், #IndiaWithVikram1 ஹேஷ்டேக்கின் மூலம் ஸ்கைரூட் குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ஏவுதல் வெற்றி பெற்றால், இந்தியாவின் தனியார் விண்வெளி நிறுவனங்கள் உலகளாவிய ஏவுதல் சந்தையில் மேலும் வலுவாக தடம் பதிக்கும் முக்கிய தருணமாக இது அமையும்.
இதையும் படிங்க: இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்... நாளை விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்!