இந்திய விண்வெளி துறையில் முக்கியமான மைல்கல்லாக கருதப்படும் நிகழ்வு நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் உருவாக்கிய விக்ரம்-1 என்ற தனியார் ராக்கெட், ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த ஏவுதல் இந்தியாவின் தனியார் விண்வெளி முயற்சிகளில் முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
விக்ரம்-1 ராக்கெட் பல்வேறு தொழில்நுட்ப விளக்க ஆய்வுப் பயணங்களையும் சிறப்பு சுமைகளையும் விண்வெளிக்கு எடுத்துச் செல்கிறது. இதில் கிரகா ஸ்பேஸ், காஸ்மோசர்வ், டிகியூப்ட் மற்றும் ஸ்கைரூட் நிறுவனத்தின் ‘ஸ்கோப்’ உள்ளிட்ட அமைப்புகளின் தொழில்நுட்ப ஆய்வு கருவிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல், காஸ்மோஸ் டயமண்ட்ஸ் உருவாக்கிய ‘காஸ்மிக் புளூம்’ என்ற கலைப்படைப்பும், மைக்ரோ-ஆர்ட் வடிவிலான சிறப்பு நினைவுப் பொருளும் இந்தப் பயணத்தில் இடம்பெறுகின்றன.
இந்த ராக்கெட் முழுமையாக கார்பன் கலவை (Carbon Composite) அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. 3டி அச்சிடப்பட்ட இயந்திரங்கள் மற்றும் அதிக உந்துவிசை கொண்ட திட எரிபொருள் பூஸ்டர்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள விக்ரம்-1, குறைந்த பூமி சுற்றுப்பாதைக்கு சுமார் 350 கிலோ எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இஸ்ரோவில் ஒரே ஆண்டில் 120 விஞ்ஞானிகள் ராஜினாமா? கடும் விதிகளை அமல்படுத்திய விண்வெளித் துறை!

முதல் சோதனைப் பயணத்தில், சுமார் 450 கிலோமீட்டர் உயரமுள்ள குறைந்த பூமி சுற்றுப்பாதையை இலக்காகக் கொண்டு ராக்கெட் இயக்கப்பட உள்ளது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான செயற்கைக்கோள்களை குறைந்த செலவில் விண்ணில் நிலைநிறுத்தும் நோக்கில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாக விண்வெளி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஏவுதல் வெற்றிகரமாக நிறைவடைந்தால், இந்தியாவின் தனியார் விண்வெளி நிறுவனங்களுக்கு சர்வதேச சந்தையில் புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அரசுத் துறையுடன் இணைந்து தனியார் நிறுவனங்களும் விண்வெளி தொழில்நுட்பத்தில் முக்கிய பங்காற்ற முடியும் என்பதற்கான வலுவான எடுத்துக்காட்டாக விக்ரம்-1 அமையும் என்று விண்வெளி ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விண்வெளி நிலையத்தை சென்றடைந்தார் இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனன்... 8 மாதங்கள் நடக்கப்போகும் முக்கிய ஆய்வு!