2 நாளில் 8 நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை!! இராஜதந்திர முயற்சி!! இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மோடி!
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இடையேயான போர் சூழலில் மேற்காசியாவில் உள்ள 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
நியூ டெல்லி: ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள் தீவிரமடைந்து, மேற்காசியா முழுவதும் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 48 மணி நேரத்தில் 8 முக்கிய நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி ஆலோசனை நடத்தியுள்ளார். இது இந்தியாவின் தீவிர இராஜதந்திர முயற்சியாக பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி பேசிய தலைவர்கள்: ஐக்கிய அரபு எமிரேட்சு அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நாஹ்யான், சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், கத்தார் அமீர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானி, ஓமன் சுல்தான் ஹய்தம் பின் தாரிக், பஹ்ரைன் மன்னர் ஹமாத் பின் ஐசா அல் கலிபா, குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல் காலித் அல் ஹமத் அல் முபாரக் அல் சபாஹ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜோர்டான் மன்னர் அப்துல்லா II ஆகியோர்.
இந்த ஆலோசனைகளில், பிரதமர் மோடி பிராந்தியத்தில் நிலவும் பதற்றம், தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து விரிவாக விவாதித்தார். குறிப்பாக, வளைகுடா நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வரும் பணிகள் மும்முரம்!! மேற்காசிய நோக்கி பறக்கும் சிறப்பு விமானங்கள்!
பல தலைவர்களிடம், தங்கள் நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து, இந்தியா அவர்களுடன் உறுதியாக நிற்கிறது என தெரிவித்தார். போர் நிறுத்தம், உரையாடல் மூலம் அமைதி மீட்பது, பொதுமக்கள் பாதுகாப்பு ஆகியவற்றை முதன்மையாக வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் இந்த உரையாடல்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். உதாரணமாக, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடனான உரையாடலில், பிராந்திய சூழல் குறித்து கவலை தெரிவித்து, பொதுமக்கள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, விரைவில் போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தினார். அதேபோல், யுஏஇ, சவுதி, பஹ்ரைன் போன்ற நாடுகளின் தலைவர்களிடம் தாக்குதல்களை கண்டித்து, ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.
இதனிடையே, மேற்காசியாவில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இந்திய தூதரகங்கள், விமான நிறுவனங்கள் உட்பட அனைத்து தரப்பினருடனும் மத்திய அரசு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த ஆலோசனைகள் மூலம், இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், பிராந்திய அமைதிக்கு இந்தியா ஆக்கபூர்வ பங்களிப்பு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தீவிர இராஜதந்திர நடவடிக்கை, உலக அரங்கில் இந்தியாவின் நிலைப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது. போர் தொடர்ந்தால் பொருளாதாரம், எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவை இந்தியாவை பாதிக்கும் என்பதால், அமைதி முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இதையும் படிங்க: ஒரு நாளைக்கு மட்டும் ரூ.7000 கோடி செலவு!! ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் போர்! அதிகரிக்கும் செலவீனம்!