ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் புதிய சம்பவங்கள் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய போர், ஏப்ரல் 8-ம் தேதி இரு தரப்புக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்தத்துடன் ஓய்வு பெற்றது. இந்த போர் நிறுத்தம் வரும் ஏப்ரல் 22-ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது.
ஏற்கனவே இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற 21 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், மீண்டும் பாகிஸ்தான் தலைநகரில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உள்ளிட்ட உயர்மட்டக் குழு பங்கேற்க உள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். ஆனால் ஈரான் தரப்போ இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க தற்போது எந்த திட்டமும் இல்லை என அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஈரான் கொடியுடன் சென்ற டூஸ்கா கப்பல் சிறைபிடிப்பு!! ஆட்டத்தை ஆரம்பித்தது அமெரிக்கா! நீடிக்கும் பதற்றம்!
இந்த சூழலில், ஈரானிய கொடி பறக்கும் ‘டூஸ்கா’ என்ற சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படை தாக்கி சிறைப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 900 அடி நீளமுள்ள இந்தக் கப்பல், அமெரிக்காவின் கடற்படைத் தடையை மீறி செல்ல முயன்றதாக டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க கப்பல் (USS Spruance) எச்சரிக்கை விடுத்தும் ஈரானிய கப்பல் குழுவினர் அதை பின்பற்றாததால், எஞ்சின் அறையில் துளை ஏற்படுத்தி நிறுத்தப்பட்டது. தற்போது அந்தக் கப்பல் அமெரிக்க மரைன்ஸ் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இதற்கு பதிலடியாக ஈரான், அமெரிக்க ராணுவக் கப்பல்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரான் இந்த சம்பவத்தை “ஆயுதமேந்திய கொள்ளை” எனக் கண்டித்து, விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிய ஈரான், உலக எண்ணெய் வர்த்தகத்தை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் நிலையில், பாகிஸ்தான் மத்தியஸ்தம் வகித்து அமைதிப் பேச்சை மீண்டும் முயற்சித்து வருகிறது. ஆனால் இரு தரப்பும் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளதால், புதிய பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பது சந்தேகத்துக்குரியதாக உள்ளது. உலக நாடுகள் இந்தப் பதற்றத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இந்த சம்பவங்கள் உலகப் பொருளாதாரத்தையும், பிராந்திய அமைதியையும் பெரிதும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. அடுத்த சில நாட்களில் ஏற்படும் திருப்பங்கள், சூழலை எப்படி மாற்றும் என்பது ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஈரானின் மருத்துவ உதவி கோரிக்கை! இந்தியா வந்த விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்!!