தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார உத்தி குறித்து அரசியல் பார்வையாளர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
“எதிரி யாரென்றே தெரியாமல், வாரிசை வளர்த்துவிடும் வேலையை செய்துகொண்டிருக்கிறார் பழனிசாமி. இதன் வாயிலாக தி.மு.க. விரித்த வலையில் அவர் சிக்கிவிட்டார்” என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஒரு கட்சித் தலைவர் தனது தொண்டர்களுக்கு ‘யார் நம் எதிரி’ என்பதை தெளிவாக அடையாளம் காட்ட வேண்டும். மறைந்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்தாலும், அவசியம் இருந்தால் மட்டுமே மற்றவர்களை சீண்டுவர். இதன் மூலம் ‘ஒன் டு ஒன்’ போட்டியை உருவாக்கினர்.
இதையும் படிங்க: திமுக வார் ரூம்களில் உச்சக்கட்ட பரபரப்பு! பெருசாக ப்ளான் செய்யும் அறிவாலயம்! கசிந்தது சீக்ரெட்!
ஆனால் பழனிசாமி, தேஜ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்ற முறையில், தி.மு.க. கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலினை மட்டுமே மையப்படுத்தி பேச வேண்டும். ஸ்டாலின் மற்றும் அவரது ஆட்சியை மையமாக வைத்துப் பேசினால்தான், பழனிசாமியும் முதல்வர் வேட்பாளர் என்ற உருவம் வாக்காளர் மனதில் பதியும்.

இதை நன்கு புரிந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், இதுவரை பழனிசாமியைத் தவிர வேறு யாரையும் விமர்சிக்கவில்லை. தவெக தலைவர் விஜய் தொடர்ந்து ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தாலும், ஸ்டாலின் ஒருமுறை கூட நேரடியாக பதிலளிக்கவில்லை. அதேபோல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் விமர்சனத்துக்கும் யாரும் பதில் கொடுக்கவில்லை.
ஆனால் உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தில் மட்டும் பழனிசாமி தொடர்ந்து கொந்தளித்து வருகிறார். சசிகலா காலில் பழனிசாமி விழுந்த புகைப்படத்தை வைத்து உதயநிதி தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். இந்த விவகாரத்தை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், பழனிசாமி ஒவ்வுமுறையும் கொந்தளிப்பதால் உதயநிதி அதை திருப்பித் திருப்பி பயன்படுத்துகிறார்.
இதன் மூலம் ஸ்டாலின் எதிர் பழனிசாமி என்ற தேர்தல் களம், பழனிசாமி எதிர் உதயநிதி என்று சுருங்கி வருகிறது. தி.மு.க.வுக்கு எதிரான ஓட்டுகள் சிதறடிக்கப்படும் வியூகம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கடந்த 50 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில் தி.மு.க. எதிர்ப்பில் தான் அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., தவெக உள்ளிட்ட கட்சிகள் உருவாகியுள்ளன. ஸ்டாலின் தான் தி.மு.க.வின் முகம் என்பதால், ஸ்டாலினை மையப்படுத்தி எதிர்ப்பை ஒன்றுகுவிக்க வேண்டும் என்று அரசியல் பார்வையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: சிட்டிங் எம்.பி மாவட்டத்துல சீட்டு கேக்காதீங்க? யாருக்கு எந்த தொகுதி! கறார் காட்டும் ஸ்டாலின்!