பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் 1,139 இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்ட நிலையில் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான பிரச்சனை போராக மாறியது. இந்த சம்பவத்திற்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் இந்த போரில், காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் போர் விமானங்களும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கைக்கு இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காசாவுக்கு மற்ற நாடுகள் அனுப்பும் உதவிகளை இஸ்ரேல் தடுத்து வருவதால் அங்கு பசி, பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது கிடைக்கும் உணவுப்பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. உதாரணத்திற்கு இந்தியாவில் மலிவு விலையில் 5 ரூபாய்க்கு கிடைக்கும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட், போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் அசல் விலையை விட 500 மடங்கு அதாவது ரூ.2400க்கு விற்கப்படுகிறது. இந்த விலைவாசி உயர்வால் காசா மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தொடர் அத்துமீறல்.. காசா மீது வன்மத்தை கக்கும் இஸ்ரேல்.. 75 பேர் பரிதாப பலி..!

இந்நிலையில் சுவீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க், காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக "Freedom Flotilla" என்ற கப்பல் மூலம் பயணித்தபோது, இஸ்ரேலிய கடற்படையால் கப்பல் சிறைபிடிக்கப்பட்டது. இஸ்ரேல் இதை "மீடியா பிரச்சாரமாக" கருதி, கப்பலை தடுத்து நிறுத்தியது. இத்தாலியின் சிஸ்லி தீவில் இருந்து காசா நோக்கி புறப்பட்ட அந்த கப்பல் இன்று அதிகாலை இஸ்ரேல் கடற்பகுதி அருகே சென்றபோது இஸ்ரேல் அதிரடிப்படையினர் அதை இடைமறித்து கிரெட்டா உட்பட கப்பலில் இருந்த 12 ஆர்வலர்களை கைது செய்தனர்.

இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் இந்தக் கப்பலை "பிரபலங்களின் செல்ஃபி யாட்" என்று விமர்சித்து, இதில் ஒரு டிரக் அளவு உதவி பொருட்கள் கூட இல்லை. மேலும், கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
கிரெட்டா முன்னதாக 2024 செப்டம்பரில் கோபன்ஹேகனில் (டென்மார்க்) காசா போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டார். மேலும், ஸ்டாக்ஹோமில் (ஸ்வீடன்) பலஸ்தீன ஆதரவு போராட்டத்தின் போதும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரூ.5 பிஸ்கட் ரூ.2400க்கு விற்பனை.. காசாவில் போரால் ருத்ர தாண்டவம் ஆடும் வறுமை..!