இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்தில், முதல் குழுவாக நான்கு இந்திய விமானப்படை வீரர்கள் விண்வெளிக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில், அடுத்தகட்ட பயணங்களில் ராணுவம் மற்றும் விமானப்படை பின்னணி இல்லாத அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பின்னணியைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் வாய்ப்பு அளிக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
ககன்யான் திட்டத்தின் முதல் குழுவில் இந்திய விமானப்படை வீரர்களான சுபான்ஷூ சுக்லா, பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன் மற்றும் அங்கத் பிரதாப் ஆகிய நான்கு பேர் இடம் பெற்றுள்ளனர். பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு 2027-ம் ஆண்டு இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணம் நடைபெறும் என இஸ்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளது.
இரண்டாவது குழுவில் மொத்தம் 10 பேர் இடம்பெற உள்ளனர். இதில் ஆறு பேர் ராணுவ விமானப் பின்னணியைச் சேர்ந்தவர்களாகவும், மீதமுள்ள நான்கு பேர் ராணுவம் அல்லது விமானப்படை பின்னணி இல்லாத அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களாகவும் இருப்பார்கள். இந்த நான்கு பொதுமக்களும் STEM பின்னணியைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என இஸ்ரோ தெளிவுபடுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இஸ்ரோவின் கனவுத் திட்டம்!! மனிதர்களின் விண்வெளி பயணம்! ககன்யான் திட்டத்தில் ஏர்டிராப் சோதனை வெற்றி!

மூன்றாவது குழுவில் 12 பேர் இடம்பெறுவார்கள். இதில் 10 பேர் ராணுவம் மற்றும் விமானப்படை அல்லாதவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் மூன்று விண்வெளிப் பயணங்களையும் சேர்த்து 26 பேர் விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பு உருவாகும். நான்காவது பயணத்திலிருந்து ராணுவம் மற்றும் விமானப்படை அல்லாதவர்கள் மட்டுமே தனியாக விண்வெளிப் பயணம் மேற்கொள்ளலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாவது குழுவினர் 72 மாதங்களிலும், மூன்றாவது குழுவினர் 96 மாதங்களிலும் பயிற்சியை முடித்து தயாராக வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு இந்திய விண்வெளித் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் முக்கிய அடியாகக் கருதப்படுகிறது.
இதுவரை உலக நாடுகள் பெரும்பாலும் ராணுவ பின்னணி கொண்ட வீரர்களைத்தான் விண்வெளிக்கு அனுப்பி வந்தன. இப்போது இஸ்ரோ பொதுமக்களுக்கும் வாய்ப்பு அளிப்பதன் மூலம், இந்தியாவின் விண்வெளித் திட்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய உயரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ககன்யான் திட்டம் இந்தியாவை விண்வெளி வல்லரசுகளின் வரிசையில் உயர்த்தும் முக்கியமான திட்டமாகும்.
இதையும் படிங்க: மக்களே என் குடும்பம்! உங்களுடன் வாழ்வதே மகிழ்ச்சி! மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி உருக்கம்!