சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதியரசர் சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி (Justice Sushrut Arvind Dharmadhikari) அவர்களை நியமித்து இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளார். மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இதனைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் 54-வது தலைமை நீதிபதியாக இருந்த நீதியரசர் எம்.எம். ஸ்ரீவஸ்தவா இன்று (மார்ச் 5) ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

1966-ல் பிறந்த இவர், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். பின்னர் 2016-ல் அங்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வந்தார்.
இதையும் படிங்க: எங்கும் தமிழ் என்பது வெறும் பேச்சா? எஸ்.ஐ. தேர்வு குளறுபடி குறித்து எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான கொலீஜியம், கடந்த பிப்ரவரி 26-ம் தேதியன்று இவரது பெயரைப் பரிந்துரைத்திருந்தது.
மத்தியப் பிரதேசத்தின் ராய்ப்பூரில் பிறந்த இவர், சிவில், கிரிமினல் மற்றும் அரசியலமைப்புச் சட்டங்களில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர். மத்திய அரசின் மூத்த வழக்கறிஞராகவும் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம் போன்ற ஒரு பழமையான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த நீதிமன்றத்திற்குப் புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டிருப்பது, தமிழகத்தின் நீதித்துறை நிர்வாகத்தில் புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தேர்தலில் போட்டியிடாத கட்சிகளுக்கு எதற்கு முன்னுரிமை? தவெக மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்றம் கேள்வி!