கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் அருகே இருக்கக்கூடிய அனூர் வனப்பகுதியில், இரண்டு தினங்களுக்கு முன்பாக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை இந்தப் பகுதியில் ஏற்படுத்தியிருக்கிறது.
வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறித்தான், இரண்டு நாட்களாக காவல் நிலையம் முன்பாக உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இந்த நிலையில், நேற்று சுமுக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். இன்று அவர்களுடைய அடக்கம் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக அனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். உயிரிழந்த அந்தோணி சாமியின் மனைவி லூர்து மேரி அளித்த புகாரின் பேரில்தான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: கர்நாடக வனப்பகுதியில் துப்பாக்கிச்சூடு: வேட்டைக்கு சென்ற 3 பேர் சுட்டுக்கொலை!
அந்தப் புகாரில் அவர் அளித்திருக்கக்கூடிய தகவலின் அடிப்படையில், வனப்பகுதிக்கு மாடுகளைத் தேடிச் சென்றிருந்த நான்கு பேர் மீது வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதிலிருந்து தப்பி வந்த மகிமைநாதன் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது, மூன்று பேர், அந்தோணி சாமி மற்றும் பீட்டர் குமார் உள்ளிட்ட மூன்று பேர், வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் தனக்குத் தெரியவந்திருப்பதாகவும் லூர்து மேரி புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில், பிஎன்எஸ் 103(4) பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். இதில் குற்றவாளிகளாக வனத்துறை அதிகாரிகள் என்ற பெயர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. யாருடைய பெயரும் குறிப்பிடப்படாமல், பதவிப் பெயரும் குறிப்பிடப்படாமல், அதேபோன்று வனத்துறையினரின் எண்ணிக்கையும் குறிப்பிடப்படாமல், குற்றம் சாட்டப்பட்டவர்களாக வனத்துறையினர் இந்த எஃப்ஐஆரில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்ட பிறகு, இதில் ஈடுபட்டிருக்கக்கூடிய வன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பெயர்கள் இந்த முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாக இங்குள்ள காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
தொடர்ந்து, இன்று அந்த மூன்று பேருடைய சடலங்களும் கொண்டுவரப்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், அவர்களுடைய அடக்கமும் இன்று நடைபெற இருக்கிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி கொண்டிருப்பதால், நேற்று முன்தினம் கிராமப் பகுதிகளில் இருக்கக்கூடிய வன அலுவலகங்களை இங்குள்ள கிராம மக்கள் அடித்து சேதப்படுத்தியிருந்தனர். சாக்கியம், கள்ளித்தொட்டி, கொரட்டியூர், லொக்கல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்த வன அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன.
இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக, நேற்று இரவும் கூட வனத்துறையினரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. வரட்டி ஓசூர் என்ற இடத்திற்கு வனத்துறை ஊழியர்கள் வந்தபோதுதான், அவர்களை வழிமறித்து இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
வன ஊழியர்கள் அதிலிருந்து தப்பி ஓடிய நிலையில், வாகனத்தின் கண்ணாடிகள் முழுமையாக உடைத்து சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தச் சம்பவம் தொடர்பாகவும் கிராம மக்கள் மீது ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: நிரம்பியது தண்ணீர்..! KRS அணையில் இருந்து காவிரியில் நீர் திறப்பு..! கர்நாடகா அரசு நடவடிக்கை..!