கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் பலியான இந்த துயரச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போது தமிழக முதலமைச்சராக இருக்கும் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஜூலை 10 அன்று கரூர் செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவில், சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் விஜய் மற்றும் த.வெ.க. தலைவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திப்பதும், அரசு வேலை உள்ளிட்ட உதவிகளை வழங்குவதும் சாட்சியாளர்களை பாதிக்கக்கூடும் என்று குறிப்பிடப்பட்டது. மேலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரின் பேச்சுகளுக்கு தடை விதிக்கவும், முதலமைச்சரின் கரூர் பயணத்தை தடுக்கவும் கோரப்பட்டது.
இதையும் படிங்க: விஜய்யின் கரூர் பயணத்திற்கு எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் திமுக இடையீடு..!! இன்று விசாரணை..!!
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது. சிபிஐ மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் போது அரசு வேலை வழங்குவது ஏற்கத்தக்கதல்ல என்று மனுவில் குறிப்பிடப்பட்டது. ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையும் படிங்க: கரூர் உயிரிழப்பு வழக்கு: தவெக மேல்முறையீட்டு மனு ஜூலை 13-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!