தமிழகத்தில் கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும் கத்திரி வெயில் காலம் நாளையுடன் நிறைவடைய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், தமிழகத்தின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வெளியிடப்பட்டுள்ள தகவல் மக்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் வளிமண்டல சுழற்சி உருவாகியுள்ளது. இந்த மாற்றங்களின் காரணமாக தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் ஓரிரு நாட்கள் தாமதம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் மே 30 வரை பல இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், வெப்பத்தின் தாக்கம் இன்னும் முழுமையாக குறையவில்லை. இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த 6 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை! லிஸ்ட்ல உங்க ஊரும் இருக்கா? வானிலை மையம் அப்டேட்!

நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் பகுதியில் பதிவாகியுள்ளது. அங்கு 8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று மாலை நிலவரப்படி 10 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. சென்னை மீனம்பாக்கம், திருத்தணி மற்றும் வேலூரில் தலா 106 டிகிரி பாரன்ஹீட், அதாவது 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
கத்திரி வெயில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், வெப்பத்தின் தாக்கம் தொடர்வதால் மக்கள் தேவையற்ற வெளிச்செல்லுதலை தவிர்க்கவும், போதுமான அளவு தண்ணீர் அருந்தவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மே 1ல் 6 மாவட்டம். மே 2ல் 8 மாவட்டம்!! அடித்து ஊற்ற காத்திருக்கும் மழை!! வெதர் அப்டேட்!