சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி தேர்தல் வழக்கை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கக் கோரி திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள நிராகரிப்பு மனுவுக்கு, தேர்தல் வழக்கு தொடர்ந்த மனுதாரர் மிலானி பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பெற்ற தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, அத்தொகுதியில் போட்டியிட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை (Election Petition) தாக்கல் செய்திருந்தார். வேட்புமனுத் தாக்கலின் போது சொத்து விவரங்கள் மற்றும் வழக்கு விவரங்கள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், எனவே அவரது வெற்றி செல்லாது எனவும் அம்மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்கால நிராகரிப்பு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மனுதாரர் மிலானி தாக்கல் செய்துள்ள தேர்தல் வழக்கில் எவ்வித முகாந்திரமும், சட்டப்பூர்வமான ஆதாரங்களும் இல்லை என்றும், உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ள இந்தத் தேர்தல் வழக்கை நீதிமன்றம் ஆரம்பக் கட்டத்திலேயே முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஜி. அருள்முருகன், உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்துள்ள நிராகரிப்பு மனு தொடர்பாகத் தேர்தல் வழக்குத் தொடர்ந்த மனுதாரர் மிலானி தரப்பில் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி ஆணையிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ்! சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!
இதையும் படிங்க: குருவை சிறப்பு தொகுப்பு..! தவிக்கும் விவசாயிகள்... தவெக அரசுக்கு உதயநிதி கண்டனம்..!!