மதுரை ஆதீனம் சென்னை சைவ மாநாட்டில் கலந்து கொள்ள மே 2ம் தேதி உளுந்தூர்பேட்டை வழியாக சென்று கொண்டு இருந்தார். அஜீஸ் நகர் ரவுண்டானா பகுதியில் பிரிவு சாலை வழியாக கடக்க முயன்ற போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் மோதியது. நல்வாய்ப்பாக யாருக்கும் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. மதுரை ஆதீனம் தன்னை கொலை செய்ய சதி நடந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். கள்ளக்குறிச்சி போலீசார் இது தொடர்பாக விசாரித்து விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டனர்.

மதுரை ஆதீனத்தின் கார் விபத்தில் சிக்கியது சாதாரண விபத்து மட்டுமே, கொலைக்கான எந்த சதியும் நடக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தனர். மதுரை ஆதீனம் கார் விபத்து தொடர்பாக, பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை ஆதினத்தை கொல்ல சதி நடப்பதாக கூறுவது பொய் என கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ரீலு அந்துபோச்சு..! கொலை முயற்சி அல்ல விபத்து தான்..! ஓவர் ஸ்பீடு டிரைவர் மீது வழக்கு..!

இந்த சூழலில் விபத்திற்குள்ளான மற்றொரு காரை ஓட்டி வந்தவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மதுரை ஆதீனத்தின் கார் டிரைவர் மீது அதிவேகமாகவும், அலட்சியமாகவும் காரை ஓட்டியதாக 2 பிரிவுகளின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில் போலீசார் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை மறுத்து மதுரை ஆதினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

மதுரை ஆதினம் வெளியிட்ட அறிக்கை: உளுந்துார்பேட்டையில் நடந்த விபத்து தொடர்பாக, போலீஸ் வெளியிட்ட அறிக்கை உண்மைக்கு புறம்பானது; ஒரு தரப்பாக இருக்கிறது. எதிர்த்தரப்பு வாகனத்தை பற்றியும், தடுப்புகளை தாண்டி வந்து அவர்கள் மோதியது பற்றியும், பதிவு எண் பொருத்தப்படாத வாகனம் என்று குற்றம் சாட்டியது பற்றியும் போலீஸ் அறிக்கையில் குறிப்பிடாதது வருத்தம் அளிக்கிறது.

முன்னுக்கு பின் முரண்பாக அமைந்துள்ள போலீசாரின் விளக்க அறிக்கை ஒரு சார்புடையதாக உள்ளதாக கருதுகிறோம். அவசர அழைப்பு எண் 100க்கு போன் செய்து முறையாக முதலில் பதிவு செய்தது நாங்கள். ஆனால் போலீசார், எந்தவித புகாரும் மதுரை ஆதினம் சார்பாக பெறப்படவில்லை என்று கூறியிருப்பது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பானது.

15க்கு மேற்பட்ட முறை போலீசாரை தொடர்பு கொண்டு பேசி இது பற்றி விளக்கங்களைக் கேட்டு அறிந்தும் கூட முழு தவறு மதுரை ஆதினம் பக்கம் தான் இருக்கிறது என்பது போல தோற்றம் உருவாக்கியுள்ளது வேதனை அளிக்கிறது. நாங்கள் சென்ற சாலையில் எந்தவித தடுப்புகளும் இன்றி சாலை சீராக இருந்தது. சேலம் டூ சென்னை சாலையில் தற்காலிக தடுப்புகள் இருந்தும் கூட மிக வேகமாக வந்து எங்களுடைய வாகனத்தில் மாருதி சுசுகி வாகனம் மோதியது.

சம்பவ இடத்தில் நாங்கள் பார்க்கும் பொழுது எதிரில் வந்த வாகனத்திற்கு பதிவு எண் போர்ட் இல்லை, இரண்டு இஸ்லாமியர்கள் மட்டும் வாகனத்தில் இருந்தனர். போலீசாரை தொடர்பு கொண்டு இருக்கின்றோம் என்று தெரியப்படுத்திய உடன் உடனடியாக சம்பவத்தை விட்டு அவர்கள் நகர்ந்து விட்டார்கள். சம்பவம் நடந்து 26 மணி நேரம் கழித்தும் எந்தவித தகவலையும் போலீசார் தெரிவிக்காததால் எங்களுக்கு மிகப்பெரிய சந்தேகம் எழுந்தது என மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கொலை முயற்சி? மதுரை ஆதினம் அளித்த புகார்.. சிசிடிவி காட்சியை வெளியிட்ட போலீஸ்..!