தமிழகத்தில் நிர்வாகப் பணிகளை மேலும் துரிதப்படுத்தும் நோக்கில், 30 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாகப் பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் மா.சாய்குமார் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்குப் புதிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அரசாணையின்படி, பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் முக்கியத் துறைகளின் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த பி.ஆகாஷ், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராகவும் , அங்கு பணியாற்றிய கே.ஜே.பிரவீன் குமார் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவராகவும் பரஸ்பரம் மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.பிரதாப் கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் , நிதித்துறை இணைச் செயலாளராக இருந்த பிரதிக்தயாள் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.சதீஷ், வெளிநாடு வாழ் தமிழர்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநராக மாற்றப்பட , திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த வி.சரவணன் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பல முக்கிய மாவட்டங்களுக்கும் புதிய கலெக்டர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கடைசி நேரத்தில் மாற்றம்.. 'சிங்கப்பெண் அதிரடிப்படை' திட்ட தொடக்கவிழா திடீர் ரத்து!
விடுமுறையிலிருந்து திரும்பிய வந்தனா கார்க் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவராகவும் , விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் ஜே.இ.பத்மஜா கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவராகவும் , தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநர் என்.பிரியா ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகராட்சி ஆணையர் எல்.மதுபாலன் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராகவும் , தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த் மோகன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவராகவும் , சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் செயலாளர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவராகவும் , உயர்கல்வித்துறை துணைச் செயலாளர் ஆர்.ரேவதி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவராகவும் , கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் டாக்டர் எம்.வீரப்பன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவராகவும் தங்களின் புதிய பொறுப்புகளை ஏற்க உள்ளனர்.
மாவட்ட ஆட்சியர்கள் தவிர, மாநில அளவிலான முக்கியத் துறை உயர் அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர். கல்லூரிக் கல்வி இயக்குநர் ஈ.சுந்தரவல்லி பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சிறப்புச் செயலாளராகவும் , ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பி.பொன்னையா கல்லூரிக் கல்வி இயக்குநராகவும் , முன்னாள் கைத்தறித்துறை செயலாளர் வி.அமுதவல்லி ஊரக வளர்ச்சித்துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய் இந்து சமய அறநிலையத்துறை இயக்குநராகவும் , அங்கு பணியாற்றிய பி.என்.ஸ்ரீதர் பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல் பூஜா குல்கர்னி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையராகவும் , அங்கு பணியாற்றிய எஸ்.பி.கார்த்திகா சென்னை பெருநகர வளர்ச்சி முகமையின் (CMDA) முதன்மைச் செயல் அதிகாரியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். சிஎம்டிஏ முதன்மைச் செயல் அதிகாரியாக இருந்த சந்திரசேகர் சாகமூரி வேளாண் வணிக இயக்குநராகப் பொறுப்பேற்க உள்ளார். மேலும், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான மங்கத் ராம் சர்மா பவர்பின் நிறுவனத் தலைவராகவும் , ஜே.ஜெயகாந்தன் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத் தலைவராகவும் , ஈ.சரவணவேல்ராஜ் தமிழ்நாடு கனிம நிறுவன மேலாண்மை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது தலைமைச் செயலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "விஜய் அரசு என்பது திருச்சபை மாடல் அரசு: கோயில்களின் கையிருப்புப் பணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை!