சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு கோவளத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனம் பெற்றுள்ளது.
மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் காலை 10.30 மணியளவில் மாநாடு தொடங்கியது. மாநாட்டுக்கு அமித்ஷா தலைமை தாங்கினார். மாநாட்டு குழுவின் துணைத்தலைவரான தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்பாளர்களை வரவேற்று உரையாற்றினார்.
மாநாட்டில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், கேரள முதல்வர் சதீசன், தெலங்கானா துணை முதல்வர் மல்லுபாட்டி விக்ரமார்கா, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்தில் பின்னடைவு... தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய நிம்மதி!
இதில் பேசிய டி.கே.சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதன் மூலம் கர்நாடகா மட்டுமின்றி தமிழ்நாடும் பயனடைய முடியும் என்று தெரிவித்தார். தற்போது உபரியாக கிடைக்கும் நீர் கடலில் கலப்பதாகவும், அணை கட்டப்பட்டால் அந்த நீரை வறட்சி உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

மேலும், நதிநீர் விவகாரங்களை மாநிலங்களுக்கு இடையேயான மோதலாக பார்க்காமல், ஒத்துழைப்புடன் அணுக வேண்டும் என சிவக்குமார் வலியுறுத்தினார். “தண்ணீர் நம்மை ஒன்று சேர்க்க வேண்டும்; பிரித்து விடக்கூடாது” என்ற அவரது கருத்து மாநாட்டில் கவனம் பெற்றது.
கிருஷ்ணா நதி நீர் விவகாரத்திலும் கர்நாடகாவுக்கு சிக்கல் இருப்பதாக தெரிவித்த அவர், ஆந்திராவின் எதிர்ப்பு காரணமாக கிருஷ்ணா நீரை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாக கூறினார். இதுதொடர்பான சட்டப்போராட்டம் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே புதுச்சேரியின் குடிநீர் தேவைகள், கோதாவரி இணைப்புத் திட்டம், சாத்தனூர் அணையில் இருந்து குடிநீருக்கான குழாய் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் கைலாஷ்நாதன் முன்வைத்தார்.
மாநாட்டில் நதிநீர் பிரச்சினைகள் மட்டுமின்றி, மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, போதைப்பொருள் தடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, விரைவு நீதிமன்றங்கள், ஆந்திர மறுசீரமைப்பு சட்டம் மற்றும் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: விஜய் முதல்வராக இருக்கும் வரை! மேகதாது அணை கட்ட ஒரு செங்கல் கூட வைக்க முடியாது! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!