கோவை மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்ட பிரசாரப் பயணத்தின் இரண்டாம் நாளில் வடவெள்ளி பகுதியில் பேசினார். திறந்த வேனில் நின்றபடி உரையாற்றிய அவர், தற்போதைய திராவிட முன்னேற்றக் கழக அரசு, அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில் நிதியைப் பயன்படுத்தி கல்லூரிகள் கட்டுவதாகக் குற்றம்சாட்டினார். கோவில் கட்டுவதற்காக, தெய்வ பக்தி கொண்டவர்கள் உண்டியலில் பணம் போடுகிறார்கள். அந்தப் பணம் கோவிலை அபிவிருத்தி செய்யவும், விரிவுபடுத்தவும் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், திமுக அரசு இந்தப் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுகிறது.
அரசாங்க நிதியில் இருந்து கல்லூரிகள் கட்ட முடியாதா? கல்வி முக்கியம் தான், ஆனால் அதற்கு அரசு நிதியைப் பயன்படுத்த வேண்டும். கோவில் பணத்தை இதற்கு உபயோகிப்பது சதிச் செயலாகவே மக்கள் பார்க்கின்றனர் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னை புளியந்தோப்பில் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசினார். அவரிடம் கோவில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவதா என்ற எடப்பாடி பழனிசாமி கேள்வி தொடர்பாக கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, திமுக ஆட்சியில் 46 கல்லூரிகளை தொடங்கி இருப்பதாகவும் கல்விப் பணியை திமுக ஆட்சி செம்மையாக நடத்திக் கொண்டிருப்பதாகவும் கல்விக்கு சரஸ்வதி என்று குறிப்பிடுகிறோம் பசிப்பிணி போக்குதலும் கல்வி அளித்தலும் இந்து சமய அறநிலையத்துறையின் பணி என்று கூறினார்.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் தான் கல்லூரிகளால் அதிகம் பயன்பெறுவதாக தெரிவித்த அவர், 19 கோவில்களில் மருத்துவமனைகளை தொடங்கி இருப்பதாகவும் கல்லூரிகளை தொடங்கலாம் என்று இந்து சமய அறநிலைத்துறை சட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் காமராஜர் காலத்திலும் அறநிலையத்துறை சார்பில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டதாக குறிப்பிட்ட அமைச்சர் சேகர்பாபு, சங்கீகள் கூடாரம் மகிழ்ச்சி அடைவதற்காக எடப்பாடி பழனிச்சாமி இப்படி பேசுகிறார் என்றும் அதிமுக ஆட்சியிலும் அறநிலையத்துறை சார்பில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் பழனி ஆண்டவர் கல்லூரியில் 2017-ம் ஆண்டு கட்டிடத்தை திறந்து வைத்திருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி விஷ விதைகளை பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: அதிமுக கூட்டணி குழம்புன குட்டை.. இபிஎஸ் மீன்-லாம் பிடிக்க முடியாது! சேகர்பாபு விமர்சனம்..!
இதையும் படிங்க: மூத்த குடிமக்களுக்கு இனி கவலையே வேணாம்... திமுக ஆட்சியில வந்த வரப்பிரசாதம்! அமைச்சர் சொன்ன ஸ்பெஷல் திட்டம்..!