தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக, தூத்துக்குடியில் வியட்நாமைச் சேர்ந்த வின்பாஸ்ட் (VinFast) நிறுவனத்தின் முதல் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தத் தொழிற்சாலை மொத்தம் ரூ.16,000 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படவுள்ளது. இது வின்பாஸ்ட் நிறுவனத்தின் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய முதலீடு.
பல கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, தொழிற்சாலையின் அமைப்பு, உற்பத்தி வசதிகள், மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு இந்த முதலீடு பயன்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக ரூ.1,119.67 கோடி செலவிடப்பட்டு, தொழிற்சாலையின் அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி அலகு அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழக தொழில் வளர்ச்சியில் புதிய மைல்கல்... முதல் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கிய முதல்வர்!
தொழிற்சாலை கட்டமைப்பை பார்வையிட்ட முதலமைச்சர் பேட்டரி கார்களில் சென்று ஆய்வு செய்தார். பிறகு விழா மேடையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், வின்பாஸ்ட் நிறுவனம் தமிழ் நாட்டின் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி என கூறினார்.

எளிமையாக தொழில் தொடங்கும் கட்டமைப்பை கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்றும் இந்தியாவின் மொத்த மின்சார கார்கள் உற்பத்தியில் தமிழ்நாடு 48% பங்கு வகிக்கிறது எனவும் கூறினார்.
இந்தியாவிலேயே தூத்துக்குடியில் தான் முழுமையான மின்சார கார் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கு விண் ஃபாஸ்ட் நிறுவனத்தின் அதிகாரிகளை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
தனது முதலீட்டுக்காக தமிழ்நாட்டை தேர்வு செய்துள்ளது பெருமை அளிப்பதாகவும், தூத்துக்குடியில் இந்த தொழிற்சாலை அமைத்த பெருமையில் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜாவுக்கும் பங்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒப்பந்தம் போடப்பட்ட 17 மாதங்களில் ஆலையில் உற்பத்தி தொடங்கியுள்ளதாக தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், சென்னை, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், ஓசூரைத் தொடர்ந்து மோட்டார் வாகன தொழில் கூடமாக தூத்துக்குடி உருவெடுத்துள்ளதாக கூறினார்.
ஹூண்டாய், நிசார், டாடா, பிஎம்டபிள்யூ, ஓலா போன்ற நிறுவனங்கள் மின்வாகன உற்பத்தியை தொடங்கியதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வங்காள மொழியா? வங்கதேச மொழியா? மம்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த முதல்வர்..!