கோவையில் இன்று நடைபெற்ற என்.டி.ஏ (NDA) கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, திமுக அரசு மற்றும் 'இந்தியா' கூட்டணி மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான அரசியல் மற்றும் மாநிலத்தின் நிதி நிலை குறித்து அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.
நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டி பிரதமர் பேசுகையில் இன்று தமிழகத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பெண்களுக்குத் திமுக தொடர்ந்து தீங்கிழைத்து வருகிறது. பெண்களுக்கான அரசியல் அதிகாரத்தையும் வாய்ப்பையும் திமுக ஏன் மறுத்தது என மக்களாகிய நீங்கள் அவர்களிடம் கேளுங்கள். இதற்கு வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குச்சாவடி மூலம் மக்கள் தெளிவான பதிலடி கொடுக்க வேண்டும்" என அறைகூவல் விடுத்தார்.
மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டிற்குப் புள்ளிவிபரங்களுடன் பதிலளித்த பிரதமர் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.14 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளது. இது முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு அளித்த தொகையை விடப் பல மடங்கு அதிகம். சாலைகள், ரயில்வே மற்றும் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி எனத் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பாஜக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
இதையும் படிங்க: நாளை கோவை வருகிறார் பிரதமர் மோடி! – அமித்ஷாவின் சிவகிரி ரோடு ஷோ விபரங்களை வெளியிட்டார் நயினார் நாகேந்திரன்!

தமிழகத்தின் தற்போதைய நிலையை விமர்சித்த பிரதமர், திமுக ஆட்சியில் இரண்டு விஷயங்கள் மட்டுமே உயர்ந்துள்ளதாகச் சாடினார். கடந்த 5 ஆண்டுகளில் திமுகவின் ஒரு குடும்பத்தின் சொத்து மட்டும் பலமடங்கு உயர்ந்துள்ளது. மறுபுறம் தமிழகத்தின் கடன் சுமை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதுதான் திமுகவின் இரண்டு சாதனைகள் என எள்ளி நகையாடினார்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் வதந்திகளைப் பரப்புவதாகக் கூறிய பிரதமர், மறுவரையறைக்குப் பிறகு தமிழகத்தின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் இன்னும் வலிமையடையும் என மீண்டும் உறுதி அளித்தார். கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களின் வளர்ச்சிக்குத் தனது அரசு என்றும் துணை நிற்கும் எனவும் அவர் பேசினார்.
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். பிரதமரின் இந்த உரை தமிழகத் தேர்தல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஸ்டாலின் ஒரு டம்மி பீஸ்! வடிவேலு காமெடிதான் ஞாபகம் வருது! மதுரையில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!