சென்னை அண்ணாசாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்கள் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில்தான் மாநிலம் முழுவதும் நடைபெறும் மின்சார வாரிய டெண்டர்கள், நிலக்கரி கொள்முதல், மின்சார உபகரணங்கள் வாங்குதல் உள்ளிட்ட முக்கிய நிர்வாக ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், முந்தைய திமுக அரசின் ஊழல் முகமூடியைக் காக்க முயல்கிறதா தவெக அரசு என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

சென்னை அண்ணாசாலையிலுள்ள மின்சார வாரிய தலைமையகத்திலிருந்து டெண்டர்கள் மற்றும் நிலக்கரி கொள்முதல் தொடர்பான முக்கிய கோப்புகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறினார். புதிய மின்சாரத்துறை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்ட சில நாட்களிலேயே, இந்தத் துணிச்சலான திருட்டு அரங்கேறியிருப்பது, துறை அதிகாரிகளின் துணையோடுதான் இது நடந்திருக்குமோ என்ற பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றார்.
இதையும் படிங்க: அவசர சிகிச்சைப் பிரிவில் அரசு மருத்துவத்துறை..! நயினார் நாகேந்திரன் கண்டனம்..!!
மின்சாரத்துறையில் கடந்த காலங்களில் நடைபெற்ற டெண்டர் முறைகேடுகள், குறிப்பாக ரூ.397 கோடி மதிப்பிலான டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், முக்கிய ஆதாரங்களைக் களவுபோகவிட்டு, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பெரும் லஞ்ச ஊழல்களையும் முறைகேடுகளையும் மூடிமறைக்கவும், அவர்களைக் காப்பாற்றவும் தற்போதைய தவெக அரசு முயல்கிறதா என்ற நியாயமான கேள்வி எழுகிறது என்றும் இந்த விவகாரத்தில் காவல்துறை உடனடியாக நேர்மையான விசாரணை நடத்தி, காணாமல்போன ஹார்ட் டிஸ்க்குகளை மீட்பதோடு, இதற்குப் பின்னணியில் இருக்கும் அதிகாரிகளையும், அரசியல் நபர்களையும் கண்டறிந்து சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவை பார்த்து கத்துக்கோங்க விஜய்..! முதல்வருக்கு நயினார் அறிவுறுத்தல்..!!