அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தில் தவெக அரசு சமரசம் செய்யக் கூடாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஜூன் மாத நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1,214 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உட்பட சுமார் 18,107 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை ஜோசப் விஜய் தலைமையிலான அரசு சற்று கவனத்துடன் அணுக வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
ஏற்கனவே குடிநீர், கழிப்பறை, போதிய வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் முடங்கியுள்ள அரசுப் பள்ளிகளில், இந்தளவிற்கான ஆசிரியர் பற்றாக்குறை மேலும் தொடர்ந்தால் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலம் மொத்தமாக பாழாகிவிடும் என்றும் தெரிவித்தார்.

மேலும், ஆசிரியர் பற்றாக்குறையை சமன் செய்ய கூடுதலான வகுப்புகளைக் கையாளும் பொறுப்பு, ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களின் தோள்களின் மீது சுமத்தப்படுவதால், அவர்களின் மன நலம், கல்வியின் தரம், மாணவர்-ஆசிரியர் இடையேயான நேரம் ஆகியவைகள் பாதிக்கப்படும் எனவும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: மூதாட்டிக்கும் பாதுகாப்பில்ல.. மனசு பதைபதைக்குது... நயினார் ஆதங்கம்..!!
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அரசுப் பணிக்காக காத்திருக்கையில், இந்த காலியிடங்களை நிரப்புவதில் அரசுக்கு எந்த சிக்கலுமில்லை என்பதே நிதர்சனம் என்றார். எனவே, தனது ஆஸ்தான நாயகனின் அருமை பெருமைகளை பரப்புவதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், தனது சொந்தத் துறையின் கீழ் இயங்கும் தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனை வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: நேரலை நிறுத்தம் ஏன்..? சட்டசபையில் ஜனநாயகத்தின் குரல் மியூட்..! வறுத்தெடுத்த நயினார்..!!