திருச்சியில் தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்டத் தலைவர்களும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், சட்டசபைத் தேர்தல் தோல்வி, அடுத்தகட்ட அரசியல் திட்டங்கள் மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விலகல் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், “ஒவ்வொரு நிர்வாகியும் தங்கள் பகுதியில் உள்ள தொண்டர்களை நேரில் சந்தித்து, கட்சி வளர்ச்சிப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். பூத் கமிட்டி, கிளை கழகம், மண்டல அளவில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் தேவைகளைக் கேட்டறிந்து கட்சித் தலைமைக்கு தெரிவிக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.
“சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. உடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது தேசியத் தலைமைதான். பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளையும் தேசியத் தலைமையே பெற்றது. கட்சியில் இருந்து வெளியே சென்றவர்கள் யாரும் சாதிக்கவில்லை. பலர் மீண்டும் பா.ஜ.க.வுக்கே திரும்பியுள்ளனர். வெளியே சென்றவர்களை விமர்சிக்க வேண்டாம். அவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அண்ணாமலை விலகலால் ஆட்டம் காணும் பாஜக! நயினார் நாகேந்திரன் பதவிக்கு வேட்டு! தலைமைக்கு போட்டி!

மேலிடப் பார்வையாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், ராமசுப்பு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். மாநில நிர்வாகிகள் மாவட்டந்தோறும் சென்று தொகுதி வாரியாகக் கூட்டங்கள் நடத்தி கட்சியை ஒருங்கிணைக்க உள்ளதாக முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய பல மாவட்டத் தலைவர்கள், “அண்ணாமலை பா.ஜ.க.வில் இருந்து விலகி புதிய இயக்கம் தொடங்கியது நமக்கு பின்னடைவுதான். இதை சரிசெய்ய அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்” என வலியுறுத்தினர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் பா.ஜ.க. மாவட்டத் துணைத் தலைவர், மாவட்டச் செயலர் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகி அண்ணாமலையின் ‘இது நம்ம இயக்கம்’ அமைப்பில் இணைந்துள்ளனர். இந்த சம்பவம் பா.ஜ.க.வுக்கு கூடுதல் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
நயினார் நாகேந்திரன் தலைமையில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக பா.ஜ.க.வின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: கட்சி ஆரம்பித்த அண்ணாமலை! பாஜக அவசர ஆலோசனை! நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!!