×
 

இந்தியாவின் மிகப்பெரிய சொத்தே இவருதான்! மோடியை புகழ்ந்து தள்ளும் சசிதரூர்.. கடுப்பில் ராகுல்காந்தி..!

பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு உள்ளிட்டவை உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய சொத்தாக உள்ளது என காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் பாராட்டி உள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் பெயரில் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் பெரும் பாதிப்பை சந்தித்தது. அதற்காக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை பாராட்டினார்.

இந்தியா எடுத்த நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு தெரிவிக்க பிரதமர் மோடி விரும்பினார். மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அந்தக் குழுக்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கிய பின் நாடு திரும்பின.

ஒரு குழுவுக்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி அவரைத் தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்கவில்லை.  மத்திய அரசே அவரை தேர்வு செய்து அனுப்பி வைத்தது.  இதனால் காங்கிரஸ் தலைவர்கள் சசிதரூரை விமர்சித்தனர். ஆனால் மத்திய அரசு பரிந்துரைத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து சசிதரூர் நாடு திரும்பினார்.

இதையும் படிங்க: இந்தியா - பாக்., போரை நான் நிறுத்தவில்லை.. பிரதமர் மோடி காட்டிய அதிரடியால் கப்சிப் ஆன ட்ரம்ப்..!

வெளிநாட்டுப் பயணங்களிலும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை சசி தரூர் புகழ்ந்து வந்தார். இதற்கு அவரது கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இது குறித்து தற்போது சசி தரூரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, “ஒருவர் தேச நலனுக்காகப் பணிகளைச் செய்துகொண்டிருக்கும் போது, இந்த மாதிரியான விஷயங்களைப் பற்றிக் கவலைப்படக் கூடாது என்று நினைக்கிறேன்.

என்னுடைய நண்பர் சல்மான் குர்ஷித், ‘தேசப்பற்றுடன் இருப்பது இப்போது எவ்வளவு பெரிய கடினமான செயலா?’ என்று கேட்டிருப்பதை நான் பார்த்தேன். தேச நலனுக்காக ஒருவர் பாடுபடும்போது, அவரைக் கட்சிக்கு எதிரானவர் என்று யாராவது கருதினால், அவர்கள் அவர்களையே கேள்வி கேட்டுக் கொள்ளவேண்டுமே, தவிர, எங்களை அல்ல.

நாங்கள் இப்போது முக்கியமான தகவலை உலகிற்குத் தெரிவித்து வருகிறோம். இந்த நிலையில், ஒருவர் என்ன சொன்னார், என்ன சொல்லவில்லை என்பதை நினைத்துக் கவலைப்பட்டு அதிக நேரத்தைச் செலவிடமாட்டேன்”. சசி தரூரிடம், ‘நீங்கள் காங்கிரஸ் கட்சியில் தொடர்வீர்களா?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். இன்னும் நான்கு ஆண்டுகள் எனக்குப் பதவிக் காலம் உண்டு. அதனால், இந்த மாதிரியான எந்தக் கேள்வியும் கேட்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்” என்று பதிலளித்தார். இந்த நிலையில், அமெரிக்கா, கொலம்பியா உள்பட 5 நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்ட சசி தரூர், அந்நாட்டின் ஆட்சியாளர்கள், கல்வியாளர்கள் முதலானவர்களை சந்தித்து பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.

நாடு திரும்பிய பின் தனது பயணம் குறித்து அவர் ஒரு நாளிதழில் கட்டுரை எழுதினார். அதில் அவர் பிரதமர் மோடியை மீண்டும் புகழ்ந்தார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

பிரதமர் மோடியின் ஆற்றல், ஊக்கம், விருப்பமுடன் பங்கேற்கும் தன்மை போன்றவை உலக அரங்கில் இந்தியாவின் முதன்மை சொத்தாக இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் நமது நாட்டின் சுய பாதுகாப்புக்கு தேவையான நியாயமான முயற்சியாக இருந்தன என்றும் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கு பதிலடியாக இருந்தன என்றும் வெளிநாடுகளில் விளக்கினோம். அவை அந்த நாடுகளின் எண்ணங்களில் மாற்றத்தை ஏற்படுத்தின.

பொறுமையுடனும், தொடர்ச்சியாகவும் தரப்படுகின்ற உண்மைகள், வேண்டுமென்றே பரப்பப்படும் தவறான தகவல்களை முறியடிக்கும் என்பதை அவை நிரூபித்தன என சசிதரூர் கூறினார்.

இதையும் படிங்க: அசீம் முனீருக்கு விருந்தா? ஒசாமாவை மறந்தாச்சா? அமெரிக்காவுக்கு சசிதரூர் சுளீர் கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share