நீட் தேர்வை எதிர்நோக்கி காத்திருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், மறு தேர்வு முற்றிலும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதியளித்துள்ளார். தேர்வு தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகளால் மனஅழுத்தத்தில் இருக்கும் மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட், வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் காரணமாக நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மே 3-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மறுதேர்வு ஜூன் 21-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாணவர்களும் பெற்றோர்களும் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்தார். நீட் மறுதேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: நீட் மறுத்தேர்வு வினாக்களும் கசிவு? சைபர் குற்றப் பிரிவு விசாரணை! மாணவர்கள் அதிர்ச்சி!

“நீட் தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். கடந்த சில வாரங்களாக நிலவி வரும் குழப்பங்களை மனதில் வைத்துக் கொள்ளாமல், முழு கவனத்தையும் படிப்பில் செலுத்த வேண்டும். தேர்வு நேர்மையாகவும், நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் நடத்தப்படும். இதற்காக சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேசிய தேர்வு முகமை கூடுதல் சலுகையையும் அறிவித்துள்ளது. தேர்வு மையங்களில் மாணவர்கள் அமைதியாகவும் பதற்றமின்றியும் தேர்வு எழுதுவதற்காக கூடுதலாக 15 நிமிடங்கள் நேரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
நீட் தேர்வு தொடர்பாக கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் மாணவர்களிடையே பெரும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், மத்திய அரசின் இந்த உறுதிமொழி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாடு முழுவதும் மாணவர்கள் ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள மறுதேர்வுக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வு ரத்து! தேர்வுக்கட்டணம் திருப்பி அளிப்பு!! வங்கி விவரங்களை புதுப்பிக்க கூடுதல் அவகாசம் அறிவிப்பு!