நேபாள பேரிடரில் மாயமான 85 தமிழர்கள்… 78 பேரின் உறவினர்களிடம் டிஎன்ஏ சேகரிப்பு!
காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன தமிழர்களை கண்டறியும் பணியில் முக்கிய நடவடிக்கையாக, அவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகளில் 78 பேரின் விவரங்கள் நேபாள அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் உள்ள இமயமலை தொடரில் கடந்த மாதம் 26-ம் தேதி பனிப்பாறை திடீரென உடைந்து சரிந்து நதியில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: நேபாள வெள்ளத்தில் சிக்கிய 600 குழந்தைகள்! பள்ளி சென்ற மாணவர்கள் மாயமான விவகாரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!
இந்த பேரிடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 85 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையின் குரோம்பேட்டையைச் சேர்ந்த பயண ஏற்பாட்டு நிறுவனம் மூலம் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டவர்களின் குடும்பத்தினர், தங்கள் உறவினர்கள் குறித்து தெளிவான தகவல் கிடைக்காமல் கவலையில் உள்ளனர்.
காணாமல் போனவர்களை அடையாளம் காணவும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவவும் டிஎன்ஏ பரிசோதனை முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக சென்னை, தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களில் உள்ள ஆய்வகங்கள் மூலம் காணாமல் போனவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை 78 பேரின் உறவினர்களிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டு, அவற்றின் விவரங்கள் நேபாள அரசிடம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், காணாமல் போனவர்களில் நான்கு பேரின் நெருங்கிய உறவினர்கள் தற்போது வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அவர்கள் ஒரு வாரத்துக்குள் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களிடமிருந்தும் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளன.
இதற்கிடையே, குரோம்பேட்டையைச் சேர்ந்த பயண ஏற்பாட்டு நிறுவன நிர்வாகி மாரவேலின் மகன் சத்ய நாராயணனும் இந்தப் பயணத்தில் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினரும் மகன் குறித்த தகவலுக்காக தொடர்ந்து காத்திருக்கின்றனர்.
“டிஎன்ஏ மாதிரி கொடுத்துவிட்டோம். பெரும்பாலான விவரங்கள் நேபாள அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்ல செய்திக்காக காத்திருக்கிறோம்” என சத்ய நாராயணனின் தந்தை தெரிவித்துள்ளார்.
பேரிடர் நடந்த பல நாட்களுக்குப் பிறகும் இடிபாடுகள் மற்றும் சேற்றுக்குள் இருந்து சிலர் உயிருடன் மீட்கப்பட்டதாக வெளியாகும் தகவல்கள், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளன. இதனால், தேடுதல் பணிகள் முடியும் வரை தங்கள் உறவினர்கள் குறித்த நம்பிக்கையை கைவிடாமல் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: நேபாளத்தில் வெள்ளத்துக்குப் பிறகு வரும் பேராபத்து? காலரா, தட்டம்மை அச்சம்! பீதியில் உறைந்த மக்கள்!