நேபாளத்தை உலுக்கிய திடீர் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, வெளிநாட்டு மீட்புக் குழுக்களுக்கு அனுமதி வழங்க மறுத்து வந்த நேபாள அரசு தற்போது தனது முடிவை மாற்றியுள்ளது. சர்வதேச அளவில் உதவிகள் குவிந்த நிலையில், குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த அனுபவமிக்க மீட்பு நிபுணர்கள் மற்றும் குழுக்களுக்கு நேபாளம் அனுமதி வழங்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனி மற்றும் பாறை சரிவு காரணமாக ஆற்றின் நீரோட்டம் தடைபட்டு, பின்னர் நீர்த்தேக்கம் உடைந்ததில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் நேபாளத்தின் ரசுவா மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வீடுகள், பாலங்கள், சாலைகள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், உயிரிழப்பு மற்றும் மாயமானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த பேரிடரைத் தொடர்ந்து நேபாள ராணுவம், காவல்துறை மற்றும் உள்நாட்டு பேரிடர் மீட்புப் பிரிவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதற்கிடையே இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களது பயிற்சி பெற்ற மீட்புக் குழுக்களை அனுப்ப முன்வந்தன.
இதையும் படிங்க: உடைந்தது திபெத் அணை! மீட்புப் பணியை நிறுத்துங்க! பாதுகாப்பான இடத்துக்கு போங்க! நேபாளத்தில் அவசர எச்சரிக்கை!
ஆனால் ஆரம்பத்தில் வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் உதவியை நேபாள அரசு ஏற்கவில்லை. 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தின்போது ஏராளமான சர்வதேச மீட்புக் குழுக்கள் நேபாளத்திற்கு வந்திருந்தன.

அப்போது உள்நாட்டு அமைப்புகளுடனும் வெளிநாட்டு குழுக்களுடனும் ஒருங்கிணைந்து செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதன் அடிப்படையில், தற்போதைய பேரிடரை தங்களது சொந்த பேரிடர் மேலாண்மை அமைப்புகளால் சமாளிக்க முடியும் என நேபாள அரசு தெரிவித்திருந்தது.
ஆனால் நிலைமை வேறு விதமாக மாறியது. இந்த வெள்ளத்தில் வெளிநாட்டினர், குறிப்பாக இந்தியர்கள் பலரும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் சம்பந்தப்பட்ட நாடுகளிடம் இருந்து நேபாள அரசுக்கு அழுத்தம் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து நேபாள அரசு U டர்ன் அடித்துள்ளது. இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் மீட்புக் குழுக்களுக்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவும் நேபாளத்திற்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகிறது. நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ள இந்தியா, பயிற்சி பெற்ற தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்களையும் தேவையான உபகரணங்களுடன் அனுப்பத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. நேபாளத்தில் குறைந்தது 320 இந்தியர்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளதால், அவர்களை கண்டுபிடிப்பதிலும் இந்த சர்வதேச ஒத்துழைப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முதலில் வெளிநாட்டு உதவி தேவையில்லை எனக் கூறிய நேபாள அரசு தற்போது தனது முடிவை மாற்றியிருப்பது, பேரிடரின் தீவிரத்தையும் மீட்புப் பணிகளில் சர்வதேச ஒத்துழைப்பின் அவசியத்தையும் வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நேபாளத்துக்கு அடுத்த பேராபத்து? இன்னும் 72 மணி நேரம்தான்! சீனா வெளியிட்ட பகீர் எச்சரிக்கை!