டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தொடர் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் மாணவர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்திய போராட்டத்தின் விளைவாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித் துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜந்தர் மந்தரில் தொடங்கிய இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவியது. நீட் தேர்வில் ஏற்பட்ட கசிவுகள், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டது, சிலர் தற்கொலை செய்து கொண்டனர் போன்ற குற்றச்சாட்டுகளுடன், கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு, போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும் உள்ளிட்ட மூன்று முக்கிய கோரிக்கைகளை சிஜேபி முன்வைத்தது.
பாஜக மூத்த அமைச்சர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோருடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசு இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தது. இதையடுத்து சிஜேபி போராட்டத்தை கைவிட்டதாக அறிவித்தது. அடுத்த நான்கு வாரங்களுக்குள் மேற்கொண்டு நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: என் அன்பான கரப்பான் பூச்சுகளே... ஆட்சியே மண்டியிட்டாச்சு..! வாழ்த்திய பிரகாஷ்ராஜ்..!

தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தில், “இளைஞர்களின் விருப்பங்கள், கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நான் ஆழமாக மதிக்கிறேன். ஜந்தர் மந்தரிலும் நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் தங்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதை நான் அனுமதிக்க மாட்டேன். நாட்டின் ஒற்றுமை பேணப்பட வேண்டும். இதை மனதில் கொண்டு எனது ராஜினாமாவை பிரதமருக்கு அனுப்பியுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தர்மேந்திர பிரதான் பதவி விலகியதால் காலியான கல்வித் துறை இலாகாவை, கர்நாடகாவைச் சேர்ந்த பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கி ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. ஏற்கனவே நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக உள்ள ஜோஷி, இப்போது கல்வித் துறையையும் கவனிப்பார். இந்த நியமனம் மாணவர்களின் போராட்டத்திற்கு அரசு பதிலளித்ததைக் காட்டுகிறது என்றும், தேர்வு முறை சீர்திருத்தங்கள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தர்மேந்திர பிரதான் மட்டும் பதவி விலகினால் போதாது.. திருமாவளவன் அதிரடி பேச்சு!