மதுரை: பள்ளிக்கூட அடையாள அட்டையில் எந்த சாதிப்பெயரும் இடம்பெறாது என்று தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் நிர்மல்குமார், எம்.பி. சு.வெங்கடேசன், எம்.எல்.ஏக்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
“பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதி பெயர் சேர்க்கும் எந்த திட்டமும் அரசுக்கு இல்லை. அமைச்சர் செங்கோட்டையன் பதற்றத்தில் தவறாக வார்த்தைகளைப் பயன்படுத்திவிட்டார். இது தொடர்பாக எந்த மாற்றமும் வராது” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
இதையும் படிங்க: மின்சாரத்துறையில் ஊழல்!? அடுத்த வாரம் வெளியாகும் வெள்ளை அறிக்கை! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!
மதுரை மாநகராட்சியில் ஒப்பந்தப் பணிகளில் பல முறைகேடுகள் நடைபெற்றிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கழிவு மேலாண்மைப் பணியைத் தனியாருக்கு மாற்றும் போதும், தற்போதுள்ள ஊழியர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. முன்பு இருந்த முறையே தொடரும் என்றார்.

மாநகரப் பகுதியில் சாலைகள் மோசமாக உள்ளதை கண்டறிந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கொள்முதல் நிலையங்கள் தற்போது தனியார் இடங்களில் இயங்குவதால், அவற்றை அரசு இடங்களுக்கு மாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி சிறப்புப் பிரதிநிதி விவகாரம் குறித்தும் அமைச்சர் விளக்கம் அளித்தார். “வெங்கடநாராயணா ஆந்திராவைச் சேர்ந்தவர். கர்நாடகாவைச் சேர்ந்தவர் அல்ல. முதலமைச்சர் விஜய்க்கு நெருக்கமான, நம்பிக்கையான நபர். ஒருங்கிணைப்புப் பணிகளை மட்டுமே செய்வார். முக்கிய முடிவுகள் எடுக்க மாட்டார்” என்றார்.
ஹார்ட் டிஸ்க் விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக விரைவில் மேல்முறையீடு செய்யப்படும். மின்வினியோக சிக்கலைத் தீர்க்க கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 9 டெண்டர்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. விசாரணையும் நடைபெற்று வருகிறது.
அரசு நிர்வாகத்தில் நம்பிக்கைக்கு உரியவர்களுக்கு பொறுப்பு கொடுப்பது தவறில்லை என்றும் அமைச்சர் நிர்மல்குமார் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் மின்தடை பிரச்னை! விழிபிதுங்கும் தவெக! அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!