மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், "இந்தியாவில் பெட்ரோல், டீசல் அல்லது எல்பிஜி சிலிண்டர்களுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை" என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இன்று மக்களவையில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் (ATF) ஆகியவற்றின் விநியோகம் சீராக உள்ளது. நாட்டின் தேவையை விடவும் அதிகமான எரிபொருள் கையிருப்பு நம் வசம் உள்ளது.
தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில் எல்பிஜி (LPG) உற்பத்தி 28% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து உற்பத்தியும் வீட்டு உபயோக நுகர்வோருக்கே முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: எரிபொருள் தட்டுப்பாடு! தாய்லாந்து மற்றும் வியட்நாமில் மீண்டும் வொர்க் ஃபிரம் ஹோம் !

எரிபொருள் தீர்ந்துவிடும் என்ற தவறான வதந்திகளால், நுகர்வோர் ஒரே நேரத்தில் அதிக சிலிண்டர்களை முன்பதிவு (Panic Booking) செய்வதால் விநியோகஸ்தர்களுக்குத் தற்காலிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பீதியால் சிலிண்டர்களைக் குவிக்க வேண்டாம் என அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் இறக்குமதி 55 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 70% கச்சா எண்ணெய் மாற்றுப் பாதைகள் வழியாகப் பத்திரமாக இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறது.
பதுக்கலைத் தவிர்க்க, சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கமளித்தார்.
உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை இந்தியா சாமர்த்தியமாகக் கையாண்டு வருகிறது; வதந்திகளைப் பரப்பாமல் தேச நலனுக்காக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பாட்டிலில் பெட்ரோல் வாங்க தடை! பதுக்கலை தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!