சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் மூலம் அதிகரித்து வரும் மோசடிகளுக்கு தீர்வு காணும் வகையில், மத்திய அரசு ஒரு முக்கியமான நடவடிக்கையை பரிசீலித்து வருகிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (X), ஸ்னாப்சாட் உள்ளிட்ட பிரபல சமூக ஊடக தளங்களில் புதிய கணக்கு தொடங்கும் போது, வங்கி கணக்கு அல்லது சிம் கார்டு பெறும் போது போன்று கேஒய்சி (Know Your Customer) சரிபார்ப்பை கட்டாயமாக்கும் திட்டம் இது.
தற்போது, இந்த தளங்களில் மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்ணை மட்டும் கொடுத்து எவரும் எளிதாக கணக்கு உருவாக்க முடிகிறது. இதனால், போலி அடையாளங்களைப் பயன்படுத்தி மோசடி, ஆன்லைன் ஏமாற்று, அடையாள மோசடி, பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான துன்புறுத்தல் போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்தப் பிரச்சினையை தீர்க்கும் நோக்கில், நாடாளுமன்ற பெண்கள் மேம்பாட்டுக் குழு (Parliamentary Committee on the Empowerment of Women) சமீபத்தில் ஒரு அறிக்கையில் முக்கிய பரிந்துரை ஒன்றை முன்வைத்துள்ளது. அந்த அறிக்கையின்படி, சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி, டேட்டிங் ஆப்ஸ் மற்றும் ஆன்லைன் கேமிங் தளங்களிலும் பயனர்களின் அடையாள சரிபார்ப்பு மற்றும் வயது உறுதிப்படுத்தல் ஆகியவற்றை KYC முறையில் கட்டாயப்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??
இது அமலுக்கு வந்தால், ஆதார், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் போன்ற அதிகாரப்பூர்வ ஆவணங்களை சமர்ப்பித்த பின்னரே கணக்கு தொடங்க முடியும். மேலும், தவறான கணக்குகளை கண்டறிந்து நீக்குவதற்கும், தளங்களுக்கு கடுமையான அபராதம் விதிப்பதற்கும் வழி வகுக்கும். இந்த நடவடிக்கை, சைபர் குற்றங்களை கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ஆன்லைன் துன்புறுத்தல், டீப் ஃபேக் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவும். உள்துறை அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு இந்த பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும், இது இன்னும் இறுதி முடிவுக்கு வரவில்லை; பரிசீலனை கட்டத்தில் உள்ளது. இதற்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது.

பல்வேறு தரப்பினர், இந்த முறை பயனர்களின் தனியுரிமையை பாதிக்கும், அரசின் கண்காணிப்பை அதிகரிக்கும், டிஜிட்டல் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் என்று கவலை தெரிவிக்கின்றனர். தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு, அநாமதேயத்தின் அவசியம் ஆகியவை குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், இந்தியாவின் டிஜிட்டல் உலகம் பாதுகாப்பானதாக மாறும் என்பது உறுதி. ஆனால், பாதுகாப்புக்கும் தனியுரிமைக்கும் இடையே சமநிலை பேணுவது முக்கியம். மத்திய அரசு இறுதி முடிவெடுக்கும் போது, பொதுமக்களின் கருத்துக்களையும் கருத்தில் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா..?? வாகன ஓட்டிகளே.. பயப்பட வேண்டாம்..!! மத்திய அரசு சொல்வது என்ன..??