டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரைப் பற்றி அவதூறாக முழக்கமிட்டதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான நோய்டாவைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தற்போது கைகூப்பி மன்னிப்பு கேட்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 23-ஆம் தேதி, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட சிறுமி, உணர்ச்சிவசப்பட்டு சர்ச்சைக்குரிய முழக்கங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
அந்த காட்சிகள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து நோய்டா காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் சம்பவம் நடைபெற்ற இடம் டெல்லி என்பதால், மேலதிக விசாரணைக்காக அந்த வழக்கு டெல்லி பார்லிமென்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இதையும் படிங்க: "என்னையும் என் தாயையும் இழிவாக பேசினார்கள்... ஆனாலும் மன்னிக்கிறேன்!" – பிரதமர் மோடி உருக்கம்!
சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள தனது மன்னிப்பு வீடியோவில், "எனக்கு 15 வயதுதான். நான் செய்தது தவறு என்பதை இப்போது உணர்ந்துள்ளேன். அங்கு இருந்த சிலரின் தூண்டுதலால் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன். எனது செயலுக்காக நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி இதுபோன்ற தவறை ஒருபோதும் செய்ய மாட்டேன்" என்று சிறுமி கைகூப்பி கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும் முன்பே வெளியிட்ட வீடியோவில், தன்னையும் தனது மறைந்த தாயாரையும் அவதூறாக பேசிய இளைஞர்களை தாம் மன்னிப்பதாக தெரிவித்திருந்தார். இளமையில் தவறு செய்வது இயல்பானது என்றும், அவர்களை நீதிமன்றங்களுக்கு இழுப்பதை விட நல்ல பாதைக்கு வழிநடத்த வேண்டும் என்பதே முக்கியம் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையில், இந்தச் சம்பவம் தொடர்பாக இந்திய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், பேச்சுச் சுதந்திரம் மற்றும் சட்ட நடவடிக்கை குறித்து சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.
மன்னிப்பு வீடியோ வெளியான பிறகு, இந்த விவகாரம் மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி தொடர்பான போலி வீடியோக்கள்!! மெட்டா இந்தியா தலைவர் மீது போலீஸ் வழக்கு! விசாரணை தீவிரம்!