இஸ்ரேல் ராணுவத்தின் போர் விமானங்கள், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளன. அணுசக்தி திட்ட மையங்கள் மற்றும் ஈரான் ராணுவ தளங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.
இந்த தாக்குதல் பற்றி கூறியுள்ள இஸ்ரேல் ராணுவம், முன் எப்போதையும் விட இன்று, ஈரான் அணு ஆயுதங்கள் பெறுவதற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்கள் ஈரான் கையில் இருப்பது, இஸ்ரேலுக்கும் இந்த உலகிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.

குடிமக்களை பாதுகாக்க வேண்டிய கடமையை நிறைவேற்றுவதை தவிர இஸ்ரேல் அரசுக்கு வேறு வழியில்லை கடந்த காலத்தில் செய்தது போல, அனைத்து இடங்களிலும் அதன் கடமையை செய்யும் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது. ஈரானில், அணுசக்தி செறிவூட்டல் திட்டம், அணு ஆயுதமயமாக்கல் திட்டம், பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களின் மையத்தை குறி வைத்து தாக்கினோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாறி மாறி அடித்துக்கொள்ளும் ஈரான்-இஸ்ரேல்.. இந்தியாவில் எகிறப் போகும் பெட்ரோல், டீசல் விலை..!
இஸ்ரேலின் உயிர்வாழ்விற்காகவும், ஈரானிய அச்சுறுத்தலை முறியடிக்கும் நோக்கத்துடனும், ‘ஆபரேஷன் ரைசிங் லையன்’ Operation Rising Lion ராணுவ நடவடிக்கையை தொடங்கி உள்ளோம். இந்த அச்சத்தை நீக்க இந்த ஆபரேஷன் எத்தனை நாட்கள் ஆனாலும் தொடரும் என்று நெதன்யாஹு எச்சரித்துள்ளார்.

மேலும், இஸ்ரேலின் தாக்குதலுக்கு வருந்தத்தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிக்கை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்தது. ஈரான் எப்போது வேண்டுமானாலும் பதில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்திய இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது ட்ரோன்களை ஏவியது ஈரான். ஈரானிய நீர்மூழ்கிக் கப்பல் இஸ்ரேலிய பிரதேசங்களை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. மேலும் பதில் தாக்குதல் நடத்திய இஸ்ரேலின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானும் இஸ்ரேலும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியாவிற்கு ஈரான் மட்டுமின்றி மற்ற அரபு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் பெறுவதில் சிக்கல் இருக்கும். இதனால் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் விலை கடுமையாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை உயருமா என்ற கேள்விக்கு, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதில் அளித்துள்ளார். கச்சா எண்ணெய் விலை நிலையாக, சமாளிக்கக் கூடியதாக உள்ளது என்றும் உலகளாவிய எரிசக்தி விலை கட்டுப்பாட்டில் இருக்கிறது. உலகில் எண்ணெய் பற்றாக்குறை இல்லை. நாங்கள் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம் என்றும் தெரிவித்தார். மேலும் மத்திய கிழக்கில் மோதல் தொடங்கிய போது, கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 100 டாலர் தாண்டுமோ என கவலை எழுந்தது.
இருப்பினும், கடந்த சில மாதங்களாக, கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது. அமெரிக்கா, கனடா போன்ற மேற்கத்திய நாடுகளிலிருந்து அதிக எண்ணெய் சந்தைக்கு வருகிறது. இஸ்ரேல்-ஈரான் மோதலில் வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்கள் இதுவரை குறிவைக்கப்படவில்லை என்பதால் தேவையற்ற கவலை வேண்டாம்" என்று அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஒரே ரீசார்ஜ்.. ரூ.3000 தான்.. வருஷம் ஃபுல்லா ஃப்ரீயா போகலாம்.. 'பாஸ்டேக்'கில் வந்தாச்சு புது ரூல்..!