டெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அரசு கையிருப்பில் வைத்துள்ள வெங்காயத்தை முக்கிய நகரங்களில் நேரடியாக சில்லறை விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சந்தையில் வெங்காயத்தின் விலையை குறைக்கவும், பொதுமக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
பருவமழை தாமதம் மற்றும் சில பகுதிகளில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் சந்தையில் எதிரொலித்து, டில்லி, சென்னை, கேரளா, அசாம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெங்காய விலை உயர்ந்துள்ளது.
இந்த சூழலில், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகள் மூலமாக அரசு கையிருப்பு வெங்காயத்தை முக்கிய நகரங்களில் விற்பனை செய்ய உள்ளது. இதற்காக மகாராஷ்டிராவின் நாசிக் பகுதியில் இருந்து டில்லி, சென்னை, கொச்சி, குவஹாத்தி உள்ளிட்ட நகரங்களுக்கு வெங்காயத்தை கொண்டு செல்லும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ‘கண்டா எக்ஸ்பிரஸ்’ என அழைக்கப்படும் இந்த ரயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது.
இதையும் படிங்க: ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தது ஏன்? சுயசரிதையில் வெளியாகப்போகும் ‘ரகசியங்கள்’? பாஜகவுக்கு நெருக்கடி!

கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபரிலும் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த இதேபோன்ற சிறப்பு ரயில் சேவை பயன்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ‘கண்டா எக்ஸ்பிரஸ்’ களமிறக்கப்பட்டுள்ளது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விலை உயர்வின் தாக்கம் நகரங்களில் தெளிவாக தெரிகிறது. டில்லியில் ஒரு கிலோ வெங்காயத்தின் சில்லறை விலை கடந்த ஆண்டு ரூ.35 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு ரூ.33க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் தற்போது ரூ.58க்கு விற்கப்படுகிறது.
நாட்டின் மிகப்பெரிய வெங்காய உற்பத்தி மாநிலமான மகாராஷ்டிராவில் காரிப் பருவ உற்பத்தி 5 முதல் 7 சதவீதம் வரை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, நடப்பு நிதியாண்டிற்கான கையிருப்புக்காக 1.2 லட்சம் டன் வெங்காயத்தை விவசாயிகள் கூட்டுறவு சங்கம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு கொள்முதல் செய்துள்ளன. கொள்முதலை வேகப்படுத்தும் வகையில், ஒரு குவிண்டால் வெங்காயத்துக்கான கொள்முதல் விலையும் ரூ.1,270-ல் இருந்து ரூ.2,645 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மும்பை தாக்குதல் 166 உயிர்களை பலிகொண்ட 26/11 வழக்கு! 18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வேகம் பிடித்த விசாரணை!