சென்னை சூளைமேட்டியில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர் சுகுமார் என்பவர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை 10 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.‘ஜான் டி.நல்’ என்ற பெயரில் இயங்கி வரும் அந்நிறுவனம், கடல் அகழ்வாராய்ச்சி மற்றும் துறைமுகம் பகுதிகளில் கட்டிடங்களை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அப்படி கட்டுமான பணியில் ஈடுபட்ட போது சில முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து துறைமுகம் அதிகாரிகள் சார்பில் அளித்த புகாரின் படி, சிபிஐ அதிகாரிகள் இன்று காலை ஜான் டி.நல் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் சிபிஐ அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

அப்போது துறைமுகம் பகுதியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் தொடர்பான ஆவணங்கள், அகழ்வாராய்ச்சி தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் உறவினரான சூளைமேடு பஜனை கோயில் தெருவில் உள்ள சுகுமார் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை முடிந்த பிறகு தான் மோசடி தொடர்பாக முழுமையான தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. சோதனை நடந்து வருவதால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான விபரங்களை சிபிஐ அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் எம்.எல்.ஏ பதவிக்கு ஆப்பு?... சபாநாயகர் அப்பாவுக்கு பறந்த புகார்...!

மேலும் வங்கியில் கடன் பெற்ற தொடர்பாகவும் நில விவகாரம் தொடர்பாகவும் இவர் மீது சிபிஐயில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் அடிப்படையிலே வங்கி அதிகாரிகளும் சிபிஐ அதிகாரிகளும் தற்போது சூளைமேடு பஜனை கோவில் தெருவில் முதல் தெருவில் உள்ள சுகுமார் வீட்டில் வந்து தற்போது 10 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு ஐந்து அதிகாரிகள் தற்போது இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... அது நெய்யே இல்லையா? சிபிஐ அதிர்ச்சி தகவல்!!