திருப்பதி கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டுவில் மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது. இதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் ஆய்வக பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் ஆகியவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதை அடுத்து திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு நெய் சப்ளை செய்யும் திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார் அளித்தது. திருப்பதி கோயிலுக்கு விநியோகித்த நெய்யில் நிபந்தனைகளை மீறி கலப்படம் செய்து 4 டேங்கர் லாரிகளில் ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் விநியோகம் செய்ததாக அந்த புகார் மனுவில் குற்றம்சாட்டப்பட்டது.

இதனால் திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம் மீது திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கலப்பட நெய், திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் தயார் ஆனது எனக் கூறி அதன் உரிமம் நிறுத்தி வைக்கப்பட்டது. திருப்பதி கோயிலுக்கு நெய் வழங்கிய திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி .ஃபுட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் மத்திய, மாநில அரசுகள் சோதனை நடத்தின. இதுகுறித்து ஏற்கனவே ஆந்திர மாநில சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்திய நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ, உணவுத்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் போலவே உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த போலோ பாபா டெய்ரி மற்றும் வைஷ்ணவி டெய்ரி நிறுவனங்கள் விசாரணை வளையத்தில் சிக்கியது. இந்த நிறுவனங்களின் முக்கிய ஊழியர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: #BREAKING: 9 பேரும் குற்றவாளிகளே! பொள்ளாச்சி பாலியல் வழக்கின் அதிரடி தீர்ப்பு..!

இந்நிலையில் ஏ.ஆர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகரன், போலோ பாபா நிறுவனத்தின் இயக்குநர்கள் விபின் ஜெயின், பூமில் ஜெயின், வைஷ்ணவி நிறுவனத்தின் சிஇஓ அபூர்வா ஆகியோர் ஜாமீன் கேட்டு ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், இவர்கள் விநியோகம் செய்தது உண்மையான நெய்யே இல்லை. பாமாயில் மற்றும் ரசாயனம் மூலம் போலியாக நெய் தயாரித்துள்ளனர். இதை போலே பாபா நிறுவனம் தயாரித்து, அவற்றை ஏஆர் மற்றும் வைஷ்ணவி நிறுவனம் மூலம் விநியோகம் செய்தனர். இதில் அறங்காவலர் குழு மற்றும் உணவு பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளன. போலே பாபா நிறுவனத்துக்கு பாலை சேகரிப்பதற்கோ, நெய் தயாரிப்பதற்கோ போதிய கட்டமைப்பு இல்லை.

அந்த நிறுவனம் தங்களிடம் பால் கொள்முதல் செய்ததே இல்லை என்று விவசாயிகள் கூறுகிறார்கள். எங்களது ஆய்விலும் அவர்கள் விநியோகம் செய்தது உண்மையான நெய் அல்ல. அது பாமாயில் மற்றும் ரசாயனம் மூலம் கலப்படம் செய்தது தெரியவந்தது. இது வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக போலோ பாபா நிறுவனம் நேரடியாக விநியோகம் செய்யாமல் ஏஆர் மற்றும் வைஷ்ணவி நிறுவனங்கள் மூலம் உண்மையான நெய் போன்று விநியோகம் செய்துள்ளனர். இது பக்காவான சதி திட்டம். இதற்கான வாட்ஸப் உரையாடல்களை கைப்பற்றியுள்ளோம். மேலும், இவர்கள் அனைவரும் பண பலம் படைத்தவர்கள். அவர்கள் வெளியில் வந்தால் ஆதாரங்களை கலைத்து வழக்கை வலுவிழக்க செய்துவிடுவார்கள். எனவே அவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என வாதிட்டனர். இதையடுத்து நீதிமன்றம் வழக்கு விசாரணையை வருகிற 17 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை... எலான் மஸ்க்-க்கு அனுமதி அளித்தது மத்திய அரசு!!