நாடாளுமன்றத்தில் மக்களவை கூட்டத்தொடரின்போது, கேள்வி நேரத்தில் நீண்ட தூர ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் குறித்த துணைக்கேள்விக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விரிவான பதில் அளித்தார். அமைச்சர் தனது பதிலில், தற்போது இயக்கப்படும் ரயில்களில் 70 சதவீதம் பொது பெட்டிகளாகவும், படுக்கை வசதி கொண்ட பெட்டிகளாகவும் உள்ளன என்று தெரிவித்தார்.

மேலும், ஏர் கண்டிஷனர் இல்லாத பிரிவுகளில் மொத்த இருக்கைகளில் 78 சதவீதம் உள்ளன என்றும் அவர் கூறினார். பயணிகளின் வசதி மற்றும் சௌகரியத்தை உறுதி செய்வதில் மத்திய அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக உறுதியளித்த அஷ்வினி வைஷ்ணவ், நடப்பு நிதியாண்டில் இதுவரை 75,000க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்! முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்!
ரயில் டிக்கெட்டுகளை கருப்புச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடைமுறையைத் தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். குறிப்பாக, இந்திய ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இணையதளத்தில் இருந்து மூன்று கோடிக்கும் மேற்பட்ட போலி கணக்குகள் அடையாளம் கண்டு நீக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
ரயில்வே பாதுகாப்பு அம்சங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருவதன் விளைவாக, தொடர் ரயில் விபத்துகள் 90 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக அஷ்வினி வைஷ்ணவ் மக்களவையில் சுட்டிக்காட்டினார். இதற்கு முன்னதாக, அவை கூட்டத்தில் இந்த மாதம் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஷ்ணு மோடி மற்றும் தத்த மேகி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் மற்றும் சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் எழுந்து நின்று அமைதியாக அஞ்சலி செலுத்தினர்.

ரயில்வே துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார். இந்த நடவடிக்கைகள் மூலம் ரயில் பயணம் மேலும் பாதுகாப்பானதாகவும், வசதியானதாகவும் மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈரான் போரால் LPG தட்டுப்பாடு..!! முதல்ல இத செய்ங்க.. இல்லனா கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும்..!! மத்திய அரசு வார்னிங்..!!