பழனியில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நில முறைகேட்டின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களைக் காப்பாற்ற தமிழக வெற்றிக் கழக அரசு முயற்சிப்பதாக பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பழனிமலை அடிவாரத்தில் செயல்பட்டு வந்த தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான நிலம், கடந்த 6-ஆம் தேதி இரண்டு கோடி ரூபாய்க்கு இரு நபர்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பழனி கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிலத்தை, பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் முறைகேடாக தனிநபர்களின் பெயரில் பதிவு செய்துள்ளதாக பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த நில முறைகேடு தொடர்பாக பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் நபர்கள், இரண்டு கோடி ரூபாய் கொடுத்து நிலம் வாங்கும் பொருளாதார வசதி கொண்டவர்கள் அல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒரு இன்ச் கோவில் நிலத்தை கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்... கலர் கலரா ரீல் சுத்துறாங்க..! அமைச்சர் ரமேஷ் பேட்டி..!!
மேலும், பழனி கோயில் நிலத்தை முறைகேடாக பதிவு செய்த விவகாரத்தில் சார்பதிவாளர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து, உயரதிகாரிகள் காப்பாற்றப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒரு மாவட்டத்தில் பத்திரப்பதிவு துறையில் நடைபெறும் இத்தகைய நடவடிக்கைகள், மாவட்ட பதிவாளர் (டி.ஆர்.) அறியாமல் நடக்க முடியாது. ஜூலை 3-ஆம் தேதி இந்தப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காகவே ஜஸ்டின் மணிகண்டன் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டார். ஆறாம் தேதி இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. மாவட்ட பதிவாளருக்கு தெரியாமல் இந்தப் பதிவு நடந்திருக்குமா? 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் இரண்டு கோடி ரூபாய்க்கு பதிவு செய்திருப்பது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இதற்கிடையில், பழனி கோயில் நில முறைகேட்டில் தவறு நடந்துள்ளதை பத்திரப்பதிவு துறை அமைச்சர் லோகேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். சார்பதிவாளர் தவறு செய்தது உறுதியானதால், அவர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விளக்கம் கேட்டபோது, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்ததாக தெரிவித்தார். தற்போது அந்தப் பத்திரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை அடிப்படையாகக் கொண்டு பதிவு செய்ததாக அவர் கூறினாலும், தவறு நடந்தது என்பது உண்மை. அதனால் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம். ஆவணமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் தொடர்பான அந்தப் பத்திரப்பதிவை நிறுத்தி வைத்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் லோகேஷ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாகர்கோயில் சிறை கைதி மரணத்தில் திடீர் திருப்பம்... அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை... 3 காவலர்கள் அதிரடி கைது...!