இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையிலான ராஜ்ஜிய உறவு இன்று புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. மும்பைக்கு வருகை தந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை நேரில் வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை சிறப்பு உலகளாவிய மூலோபாயக் கூட்டாண்மை என்ற நிலைக்கு உயர்த்துவதாக அறிவித்தார். மும்பை மாநகரின் அழகையும், இங்குள்ள வரலாற்றுச் சிறப்புகளையும் வெகுவாகப் பாராட்டிய மேக்ரான், இந்திய வீரத்தின் அடையாளமாகத் திகழும் வீர் சாவர்க்கர் கடலில் குதித்து ஆங்கிலேயரிடம் இருந்து தப்பிக்க முயன்ற அதே கடற்கரை நகரத்தில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது சிறப்பானது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பின் மிக முக்கிய மைல்கல்லாக, இந்தியாவில் ஹெலிகாப்டர் அசெம்பிளி லைன் அமைப்பதற்கான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி வரை பறக்கக்கூடிய உலகின் ஒரே ஹெலிகாப்டர் இனி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்தியா மற்றும் பிரான்ஸ் கூட்டாண்மைக்கு எல்லைகளே கிடையாது; அது எவரெஸ்ட் சிகரம் வரை நீண்டது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் முழங்கினார். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா அண்மையில் கையெழுத்திட்ட மிகப்பெரிய தாராள வர்த்தக ஒப்பந்தம், இந்தியா-பிரான்ஸ் இடையிலான வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ஒயின்கள் மீது 200% வரி விதிப்பேன்..!! பிரான்ஸுக்கு பறந்த வார்னிங்..!! அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி..!!
மக்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த 2026-ஆம் ஆண்டை இந்தியா - பிரான்ஸ் கண்டுபிடிப்பு ஆண்டு ஆக இரு நாடுகளும் அறிவித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, விண்வெளி, பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் இரு நாட்டு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் இணைந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரான்சில் இந்தியக் கலாச்சாரத்தைப் பரப்ப 'சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையம்' விரைவில் திறக்கப்பட உள்ளது. உக்ரைன் போர் மற்றும் மேற்கு ஆசிய பதற்றங்களுக்கு இடையே, இந்தியா-பிரான்ஸ் கூட்டணி உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு ஒரு வலுவான சக்தியாகத் திகழும் என இரு தலைவர்களும் உறுதி அளித்தனர்.
இதையும் படிங்க: புற்றுநோயை வெல்லும் இந்திய குழந்தைகள்! 94.5% பேர் உயிர் பிழைப்பதாக எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!