தமிழ்க் கலாச்சாரம் மற்றும் இலக்கிய உலகிற்கு டி. ஞானசுந்தரம் ஆற்றிய பங்களிப்பு ஈடுசெய்ய முடியாதது எனப் பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த தமிழறிஞருடனான தனது சந்திப்பை நினைவு கூர்ந்த பிரதமர், ஜனவரி 2024-இல் நான் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலுக்குச் சென்றபோது அவருடன் உரையாடியதை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். அந்தச் சந்திப்பின்போது கம்பராமாயணம் குறித்து திரு டி. ஞானசுந்தரம் அவர்களுக்கு இருந்த ஆழ்ந்த புரிதல் மற்றும் புலமை தன்னைப் பெரிதும் கவர்ந்ததாகப் பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
டி. ஞானசுந்தரம் அவர்கள் தனது எழுத்துக்கள் மூலம் வாழ்நாளைத் தமிழுக்காக அர்ப்பணித்து, சமூகத்தின் கலாச்சார உணர்வை வளப்படுத்தியவர் எனப் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார். அவரது படைப்புகள் வருங்காலத் தலைமுறை வாசகர்களுக்கும் அறிஞர்களுக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று குறிப்பிட்ட அவர், இலக்கியத் துறைக்கு ஞானசுந்தரம் அவர்களின் பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய் நடிகரா இருந்தா டெல்லிக்கு அழைத்திருப்போம்! பராசக்தி படக்குழு விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்!
தமிழறிஞரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். "ஓம் சாந்தி" என முடித்த அவரது இந்த இரங்கல் செய்தி, தமிழக இலக்கிய உலகில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வெற்றி பொங்கட்டும்.. புதிய விடியல் பிறக்கட்டும்! தமிழக மக்களுக்கு விஜய், இபிஎஸ், அன்புமணி பொங்கல் வாழ்த்து..!