இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் நியூசிலாந்துக்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் போது இந்தியா–நியூசிலாந்து இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுவதால், இரு நாடுகளின் வணிக வட்டாரங்களும் இந்த பயணத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
பிரதமர் மோடியின் பயணத்தை நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் சமூக வலைதளத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தனது பதிவில், இந்திய பிரதமரை நியூசிலாந்தில் வரவேற்க ஆவலுடன் இருப்பதாகவும், இது இரு நாடுகளின் உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் முக்கியமான தருணமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. அதேபோல், நியூசிலாந்தின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தியா முக்கிய பங்குதார நாடாக இருப்பதாக கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் இந்த பயணத்தின் மூலம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமர்நாத் யாத்திரை இன்று துவக்கம்!! யாத்திரிகர்களுக்கு பிரதமர் மோடியின் 5 அன்பு கட்டளை!!

ஏப்ரல் மாதத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே கையெழுத்தான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் மூலம் நியூசிலாந்தின் ஏற்றுமதி அதிகரிப்பதுடன், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், பொருளாதார வளர்ச்சிக்கும் இது குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், சுமார் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய சந்தையில் நியூசிலாந்து நிறுவனங்கள் தங்களது பொருட்கள் மற்றும் சேவைகளை அதிகளவில் கொண்டு செல்ல புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் கிறிஸ்டோபர் லக்சன் கூறியுள்ளார். இதன் மூலம் நியூசிலாந்தின் பல்வேறு துறைகளில் வருமானம் உயரும், புதிய முதலீடுகள் வருவதற்கான சூழல் உருவாகும் மற்றும் ஊதிய உயர்வுக்கும் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த பயணம், இந்தியா–நியூசிலாந்து உறவை பொருளாதாரம் மட்டுமின்றி, முதலீடு, கல்வி, தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு துறைகளில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி தூங்கமாட்டார்! அதிகாலையிலேயே போன் செய்த அதிபர் ட்ரம்ப் பாராட்டு!