பிரதமர் நரேந்திர மோடி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரிக்கு வருகை தர இருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக 2021 பிப்ரவரி மாதத்தில் அவர் புதுச்சேரி வந்திருந்தார். அப்போது பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்.
இப்போது 2026 பிப்ரவரி 16-ஆம் தேதி அவர் மீண்டும் புதுச்சேரி செல்ல உள்ளார். இந்த வருகை அரசியல் ரீதியாகவும், வளர்ச்சி ரீதியாகவும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதாகும்.

புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன. இந்தக் கூட்டம் லாஸ்பேட்டை விமான நிலைய அருகே உள்ள மைதானத்தில் அல்லது தாகூர் கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி இங்கு உரையாற்றி, மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைத்து, மக்களிடம் நம்பிக்கையை விதைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா வரிக்குறைப்பு... வளர்ச்சியின் மைல்கல்..! நயினார் பெருமிதம்..!
மேலும், இந்தப் பயணத்தின்போது பல்வேறு மத்திய அரசுத் திட்டங்களை தொடங்கி வைப்பதும், அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. புதுச்சேரி மக்களின் நலனுக்காக புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள், வீட்டு வசதி திட்டங்கள், சாலை மேம்பாடு, கல்வி மற்றும் சுகாதாரத் திட்டங்கள் போன்றவை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. பிரதமர் வருகையையொட்டி, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் செயற்கை ஓடுதள பாதை, சாரதாம்பாள் நகரில் உள்ள நீச்சல்குளம் ஆகியவற்றை திறந்த வைக்க உள்ளார்.
இதையும் படிங்க: மத்திய நிதிநிலை அறிக்கை தேசத்தின் வளர்ச்சிக்கான அச்சாணி... பிரதமருக்கு நன்றி சொன்ன நயினார்..!