தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் வேளையில், தமிழக பாஜக தொண்டர்களின் களப்பணியைப் பாராட்டிப் பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தமிழக பாஜகவினர் ஆற்றி வரும் பங்கு மகத்தானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வளர்ச்சிக்காக உழைக்கும் செயல்வீரர்களைப் பாராட்டிப் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது. திமுகவின் மோசமான நிர்வாகத்தை அம்பலப்படுத்தி, மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொலைநோக்குப் பார்வையை (Vision) மக்களிடம் விரிவாக எடுத்துரைக்கும் தமிழக பாஜக செயல்வீரர்களை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிப் பார்வை மற்றும் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அவர்கள் காட்டும் உறுதி பாராட்டுக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வாக்குச்சாவடி அளவிலான பணிகளை (Booth Level Management) வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் மோடி ஒரு முக்கியக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்: எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி’ (Mera Booth Sabse Mazboot). வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி (திங்கட்கிழமை) மாலை இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கடினமாக உழைக்கும் தமிழக பாஜகவின் பூத் லெவல் முகவர்கள் மற்றும் செயல்வீரர்களுடன் பிரதமர் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களுக்கு உற்சாகம் அளிப்பதோடு தேர்தல் வெற்றிக்கான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.
இதையும் படிங்க: திமுக வரலாற்றை உடைப்பேன்! தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
தமிழகத்தில் இந்த முறை பாஜக ஒரு பலமான கூட்டணியை அமைத்து, ஆளுங்கட்சியான திமுகவிற்கு நேரடிச் சவாலாக உருவெடுத்துள்ளதாகக் கருதும் பிரதமர், தொண்டர்களின் உழைப்பு வீண் போகாது எனத் தனது பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏப்ரல் 23-ல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பிரதமரின் இந்த நேரடித் தலையீடு மற்றும் பாராட்டு, தமிழக பாஜகவினரிடையே இரட்டிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழக தேர்தலில் ராமதாஸ் அணிக்கு 'சிலிண்டர்' சின்னம்! 30 வேட்பாளர்களுக்கு பொது சின்னம் ஒதுக்கீடு!