புது டெல்லி: வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க அரசு நிர்வாகம் மக்களின் வாழ்க்கை முறையையும் வாழ்க்கைத் தரத்தையும் தொடர்ந்து மேம்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
கர்மயோகி சப்தா எனப்படும் அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், “வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க பொருளாதார வளர்ச்சி, நவீன உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் திறமையான பணியாளர்கள் அவசியம்” என்றார்.
இந்தியா வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி எவ்வாறு முன்னேறுகிறது என்பதை தெளிவாகக் காண முடிவதாகவும், இந்தக் கனவுகளை நிறைவேற்றும் பொறுப்பு நம்மைச் சார்ந்த அனைவருக்கும் உண்டு என்றும் பிரதமர் கூறினார்.
இதையும் படிங்க: சவாலான தருணங்களை இந்தியா எதிர்கொள்கிறது! மேற்காசிய போர் குறித்து பிரதமர் மோடி ஓபன் டாக்!
“மக்களின் வாழ்க்கை முறையும், வாழ்க்கைத் தரமும் தொடர்ந்து மேம்படும் வகையில் அரசு நிர்வாகம் இருக்க வேண்டும். இதுவே நமது மிகப் பெரிய சவால்” என்று அவர் வலியுறுத்தினார்.

2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கை நினைவில் கொண்டு, தற்போதைய செயல்பாடுகள் நாட்டின் முன்னேற்றத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அரசு ஊழியர்கள் சிந்திக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
மாறிவரும் உலக சூழலில் நாடு முன்னேறிச் செல்லும்போது, பொதுச் சேவைகளை மக்கள் சேவையாக மாற்றி, அதை மனதாரச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசு ஊழியர்களின் திறன் மேம்பாடு மற்றும் அவர்களின் பணியில் தரம் உயர்த்துவது மூலம் மக்களுக்கு சிறந்த சேவை வழங்க முடியும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். கர்மயோகி சப்தா போன்ற பயிற்சி நிகழ்ச்சிகள் அரசு ஊழியர்களுக்கு புதிய உத்வேகத்தையும், திறனையும் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.
பிரதமரின் இந்த உரை, அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. 2047ஆம் ஆண்டு இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் தேசிய இலக்கை நோக்கி அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்ற அவரது அழைப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மேற்காசிய போர் பதற்றம்! முழு பலத்துடன் எதிர்க்கிறோம்!! பிரதமர் மோடி பெருமிதம்!